பிரித்தாளும் சூழ்ச்சியில் மத்திய அரசு... பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கடும் பாய்ச்சல்
சென்னை: காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசு பிரித்தாளும் சூழ்ச்சியை செய்வதாக தமிழக பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கர்நாடகத்திற்கு சாதகமாக நடந்து கொண்டு தமிழக மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்திருப்பதாகவும் பொறியாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்றும் அவர்கள் கூறியுள்ளர்
இதுகுறித்து ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளரும், சங்கத்தின் செயற்குழு உறுப்பினருமான வி முத்துவிஜயன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசியலமைப்புச் சட்டத்தைக் காக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. ஆனால் மத்திய அரசு தனது கடமையிலிருந்து தவறி விட்டது. கர்நாடக அரசுக்கு சாதகமாகவும், தமிழகத்திற்கு விரோதமாகவும் அது நடந்து கொண்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியத்தை நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் அமைக்க முடியாது என்று மத்திய அரசு கூறுவது நியாயமற்றது. அதற்கு அவசியமே இல்லை. நர்மதா அணை கட்டுப்பாட்டு வாரியம், கிருஷ்ணா கோதாவரி மேலாண்மை வாரியம் ஆகியவை நாடாளுமன்ற அனுமதி இல்லாமல்தான் அமைக்கப்பட்டன.
இந்த வாரியங்கள் அமைப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை. அனுமதியும் பெறப்படவில்லை. சட்டப்படி அதற்கு அவசியமும் இல்லை. ஆனால் காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மட்டும் மத்திய அரசு பாரபட்சமாக நடப்பது ஏன் என்று புரியவில்லை.
கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் காவிரிப் பாசனப் பகுதிகளையும், அணைகளையும் பார்வையிட்ட மத்திய நிபுணர் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை மிக மிக பொதுப்படையாக உள்ளது. இது தமிழகத்திற்கு எந்தப் பலனையும் தராது என்றார் முத்து விஜயன்.