வேடசந்தூரில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கடைக்குள் புகுந்த அரசு பேருந்து
திண்டுக்கல்: வேடசந்தூரில் அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் கடைக்குள் புகுந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூரில் இருந்து அரசு பேருந்து ஒன்று ஞாயிற்றுக்கிழமை பழனிக்கு கிளம்பியது. பேருந்தை சரவணன் என்பவர் ஓட்டினார். ரவிச்சந்திரன் என்பவர் கண்டக்டராக இருந்தார்.
பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து அங்கிருந்து வெளியே சென்றது. அப்போது திடீர் என்று பேருந்தின் பிரேக் வேலை செய்யவில்லை. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள செருப்புக் கடைக்குள் புகுந்தது.
பேருந்து கடைக்குள் வருவதை பார்த்து அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த விபத்தில் பயணிகள் உள்பட யாருக்கும் நல்லவேளையாக காயம் ஏற்படவில்லை. ஆனால் கடையின் மேற்கூரை லேசாக சேதம் அடைந்துவிட்டது.
இதற்கிடையே அப்பகுதி மக்கள் ஓடி வந்து பேருந்தின் டிரைவர், கண்டக்டரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெரும் விபத்தை தவிர்க்கவே வேறு வழியில்லாமல் பேருந்தை கடைக்குள் விட்டதாக டிரைவர் தெரிவித்தார். அதன் பிறகு மக்கள் சமாதானம் ஆகி அங்கிருந்து சென்றனர்.