மது விற்பனை மூலம் அரசுக்கு ரூ.21,641 கோடி வருமானம்!: மதுவிலக்கு சாத்தியமில்லை
சென்னை: இந்த ஆண்டு மதுபான விற்பனை மூலம் அரசுக்கு 21,641 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பூரணமதுவிலக்கு என்பது தமிழகத்தில் சாத்தியமில்லை என்றும் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
சட்டசபையில் நேற்று, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, வருவாய்த் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் ஒன்றில், ''2013-2014 ஆம் ஆண்டில் மதுபான விற்பனை மூலம் அரசுக்கு ரூ.21 ஆயிரத்து 641 கோடியே 14 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
இதில், ஆயத்தீர்வை வருவாய் ரூ.5034 கோடியே 82 லட்சமும், விற்பனை வரி ரூ.16,606 கோடியே 32 லட்சமும் அடங்கும். அயல்நாட்டு மதுபானங்களின் சிறப்புக் கட்டணம் மூலமாக அரசுக்கு கிடைக்கப் பெற்ற வருவாய் ரூ.3 கோடியே 30 லட்சம் ஆகும்" என்று கூறப்பட்டுள்ளது.
மது விலக்கு மற்றும் அமலாக்கத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள், மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
பாலபாரதி (மார்க்சிஸ்ட்):
டாஸ்மாக் மது விற்பனை மூலம் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. அது நல்லதுதான். எனினும், சாலையில் சிலர் மது குடித்து தன்னிலை மறந்து விழுந்து கிடப்பதைப் பார்க்கிறோம். இதற்கு நான் உட்பட நாம் அனைவரும்தான் பொறுப்பு. சமீபத்தில் நடந்த தேர்தலின்போது, மதுக்கடைகள் தொடர்ந்து 3 நாட்கள் மூடியிருந்தன. அப்போது விபத்துகள் குறைந்ததாகத் தெரிகிறது.
எனவே, நமது தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இதற்கு ஏதாவது வழி செய்யவேண்டும். மது விற்பனை மூலம் வருவாய் வருவது ஒருவழிப்பாதை. ஆனால், அதற்கு மாற்றாக, மதுப் பழக்கத்தைக் குறைக்க இன்னொரு வழி கண்டறியப்படவேண்டும் என்றார்
மதுவின் தீமை
இதற்கு பதிலளித்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், மதுவின் தீமை, நம் எல்லோரையும்விட முதல்வருக்கு நன்றாகத் தெரியும். மது விற்பனை செய்யும் அதே நேரத்தில் சீர்திருத்தங்கள் செய்யவேண்டும் என்பதையும் உணர்ந்திருக்கிறோம். அது மட்டுமின்றி, நாடு முழுவதிலும் குஜராத்தை தவிர எந்த மாநிலத்திலும் மதுவிலக்கு அமலில் இல்லை. குஜராத்திலும்கூட அது 100 சதவீதம் வெற்றி பெறவில்லை. புலி வாலைப் பிடித்த கதையாகிவிட்டது. அங்கு கள்ளச் சாராய விற்பனை அதிகரித்துள் ளது.
கள்ளச்சாராயத்தை ஒழிக்க
தமிழகத்தில் மது விற்பனையை நாம் விரும்பி ஏற்கவில்லை. கள்ளச் சாராயம், போலி மது வகைகளை ஒழிக்கவே மது விற்பனையைத் தொடரவேண்டியுள்ளது. மது விற்பனையை அரசு செய்து வருவதால், தமிழகத்தில் கள்ளச் சாராய சாவுகள் முழுவதுமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
போலிமது நுழையும்
தீமையிலும் இது ஒரு நன்மையாகும். நாம் மது விற்பனையை நிறுத்தினால் கள்ளச் சாராய விற்பனை தொடங்கிவிடும், அண்டை மாநிலங்களில் இருந்து போலி மது நுழையும்.
மதுவிலக்கு
எனவே, தமிழகத்தில் மது விலக்கு அமல்படுத்த வேண்டுமென்றால், குறைந்தபட்சம் அண்டை மாநிலங்களாவது மதுவிலக்கை அமல்படுத்தி யிருந்தால் பரிசீலிக்கலாம். மது விற்பனையை முழுவதுமாகத் தடுக்க ஏதுவான சமூகச் சூழல் ஏற்படவேண்டும். அதற்கான சட்ட அமைப்புகளும் நம்மிடம் இப்போது இல்லை என்றார்.
இளம் வயதில் அடிமை
தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை காரணமாக 15 முதல் 24 வயது உடையவர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நஞ்சப்பன் கேள்வி எழுப்பினார்.
2000 ஆண்டுகளாக
மதுவுக்கு எதிராக இன்று நேற்றல்ல. 2 ஆயிரம் ஆண்டுகளாகப் பேசிவருகிறோம். மதுவிலக்கு பற்றி வள்ளுவர்கூட குறள் எழுதியுள்ளார். விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை நாம் அனைவரும் சிறப்பாக மேற்கொண்டு சமூகச் சூழலை மாற்றி இப்பழக்கத்தைக் குறைக்க வேண்டும் என்றார் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.