டிடிவி தினகரன் எம்எல்ஏக்களால் கெடுபிடி.. ரிசார்ட்டுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஓட்டம்
புதுச்சேரி: டிடிவி தினகரன் எம்எல்ஏக்கள் தங்கியுள்ள தனியார் ரிசார்ட்டில் போலீஸ் கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், அங்கு, தங்கிய உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அலறியடித்துக் கொண்டு வேறு ஹோட்டல்களுக்கு சென்றுவிட்டனர்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள புதுச்சேரி 'விண்ட்பிளவர்' ஹோட்டலின் முன் நேற்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர், தலைமையில் திரண்ட அதிமுகவினர், டிடிவி தினகரன் கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பதிலுக்குத் தினகரன் ஆதரவாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் கொடும்பாவியை எரித்தனர். இதனால் அங்கு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தடுப்பு வேலி
மேலும் நேற்றைய போராட்டம் காரணமாக ஹோட்டலில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. ஹோட்டலுக்கு வரும் வாகனங்கள் கடுமையான சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

தொடர் சோதனையால் கடுப்பு
ஹோட்டலில் தங்கி இருக்கும் மற்ற சுற்றுலா பயணிகள் வெளியில் வந்து சுற்றுலா இடங்களைப் பார்த்துவிட்டு ஹோட்டலுக்குள் செல்லும்போது இதேபோல சோதனைக்கும், விசாரணைக்கும் ஆளாகிறார்கள். இதனால் அவர்கள் கடுப்பாகியுள்ளனர்.

போலீஸ் கெடுபிடி
தனிமையில் அமைதியான முறையில் தங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதுபோன்ற ஹோட்டல்களுக்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். ஆனால் இங்குள்ள கெடுபிடியால் அது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

வேறு ஹோட்டலுக்கு ஓட்டம்
மேலும் ஹோட்டலில் தங்கி உள்ள எம்.எல்.ஏ.க்களாலும், அவர்களின் ஆதரவாளர்களாலும் ஹோட்டல் வளாகத்துக்குள்ளும் அமைதியான சூழ்நிலை இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் பலர் ஹோட்டலை காலி செய்துவிட்டு வேறு ஹோட்டலுக்கு சென்றுவிட்டனர்.












Click it and Unblock the Notifications