ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மதுரை, திருச்சியில் கடையடைப்பு: வணிகர்கள் உண்ணாவிரதம்
மதுரை: சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை, திருச்சி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
வணிகர் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு மதுரையில் உள்ள 38 சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
மதுரையில் கடைகள் அடைப்பு
காலை 6 மணிமுதல் மதுரை நகரம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் முக்கிய கடைவீதிகளான கீழமாசி வீசி, வடக்கு வெளிவீதி, உள்ளிட்ட பல இடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
திருச்சியில் பாதிப்பு
திருச்சி மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வணிகர்கள் கடைகளை அடைத்துள்ளனர். இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில்
நாமக்கல் மாவட்டத்தில் காலை மணிமுதலே கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் லாரிகளில் இருந்து சரக்குகளை ஏற்றி இறக்கமுடியவில்லை. இதனால் சரக்குகள் தேக்கமடைந்துள்ளன.
சிறைக்கு அனுப்புவதா?
அம்மாவை சிறைக்கு அனுப்புவதா? நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடைபெறுவதாக வணிகர்கள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
வணிகர்கள் நலன் காத்தவர்
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, வணிகர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில், அந்நிய நேரடி முதலீட்டிற்கு எதிர்ப்பு, பொருள் மற்றும் சேவை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
விடுதலை செய்யவேண்டும்
ஜெயலலிதாவை சிறையில் இருந்து விடுதலை செய்யவேண்டும் என்றும், அவருக்கு ஆதரவாக இந்த கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுவதாகவும் வணிகர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்ணாவிரதம்
இந்நிலையில், நெல்லை மற்றும் திண்டுக்கலில் அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இதில் வணிகர்கள் பெரும்பாலோனோர் பங்கேற்றுள்ளனர்.