மோடி வருகை எதிரொலி... விமான நிலையம் டூ அடையாறு வரை திசை திருப்பப்பட்ட வாகன போக்குவரத்து!
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் எதிரொலியாக சென்னை விமான நிலையம் முதல் அடையாறு வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை : காவிரி வாரியம் அமைக்காத பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகைக்கு அரசியல் கட்சியினரும் பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரதமருக்கு எதிராக கருப்புகொடி காட்டவும் திட்டமிடப்பட்டுள்ளதால் சென்னை விமான நிலையம் முதல் அடையாறு வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது தமிழக மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். மத்திய அரசுக்கு எதிராக இளைஞர்கள், உணர்வாளர்கள் என்று அரசியல் கட்சி என்ற எல்லைகளைக் கடந்து ஒன்றுதிரண்டு போராடி வருகின்றனர். இந்நிலையில் ராணுவ கண்காட்சி தொடக்க விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வருவதால் காவிரி வாரிய விவகாரத்தில் இழுத்தடிப்பு செய்து தமிழகத்திற்கு வஞ்சனை செய்து வரும் அவரது தலைமையிலான மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க பல்வேறு அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
இந்த முடிவின்படி சென்னை வரும் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பை பதிவு செய்ய ஆயிரக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். இதனால் பிரதமரின் பெரும்பாலான பயணம் வான்வழியாகவே திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் பிற்பகலில் சென்னை அடையாறு புற்றுநோய் மைய கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இந்த நிகழ்ச்சியின் போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தவிர்க்க சென்னை விமான நிலையம் முதல் அடையாறு வரை காலை 11 மணி முதல் 3 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து அடையாறு செல்லும் வாகனங்கள் சின்னமலை வழியாக நந்தனம் சந்திப்பிற்கு சென்று திருவிக பாலம் வழியாக அடையாறு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடையாறில் இருந்து விமான நிலையம் நோக்கி செல்லும் வாகனங்கள் டைடல் பார்க் வழியாக எஸ்ஆர்பி டூல்ஸ் வலதுபுறம் திரும்பி வேளச்சேரி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அடையாறு செல்ல வேண்டிய வாகனங்கள் சேமியர்ஸ் வழியாகவும், விமான நிலையம் செல்ல வேண்டிய வாகனங்கள் நந்தனம் வழியாகவும் செல்ல அனுமதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.