மக்கள் பாதுகாப்பு கழகம் சார்பில் 234 தொகுதிகளில் போட்டி - டிராபிக் ராமசாமி அறிவிப்பு
ஈரோடு: தன்னுடைய மக்கள் பாதுகாப்பு கழகம் சார்பாக வருகின்ற சட்ட மன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்துவேன் என டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.
கோபி அருகே உள்ள மொடச்சூரில் கட்டப்பட்டு உள்ள பாலத்தை உடனே திறக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுப்பதற்காக டிராபிக் ராமசாமி நேற்று காலை ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு வந்த அவர் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த அரசு வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்களை தான் வைத்திருந்த காமிராவில் படம் பிடித்தார். அப்போது அவர் விதிமுறைகளை மீறி இங்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளது என்று பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.
இதன் பிறகு கலெக்டரின் நேர்முக உதவியாளர் திவாகரிடம் சென்று தான் வைத்திருந்த கோரிக்கை மனுவை கொடுத்து ஒப்புதல் ரசீது பெற்று கொண்டார்.
இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மொடச்சூர் பாலம் திறப்பது தொடர்பாக நேற்றே மாவட்ட கலெக்டரை பார்க்க முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை. இன்று காலை 9.30 மணிக்கு பார்க்க வருவதாக கலெக்டரிடம் கூறினேன்.
ஆனால் நான் கலெக்டரை பார்க்க வரும் போது அவர் இல்லை, அலுவலக வேலையாக வெளியூர் சென்று விட்டதாக கூறுகிறார்கள். இதனால் நான் மனுவை கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் கொடுத்து உள்ளேன்.
அந்த மனுவில் மொடச்சூரில் கட்டிமுடிக்கப்பட்டு உள்ள பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு உடனே திறந்து விட வேண்டும், இன்னும் 2 நாட்களுக்குள் அந்த பாலத்தை திறக்காவிட்டால் கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, நகராட்சி ஆணையர் மீது வழக்கு தொடருவேன்.
இதே போல ஈரோட்டில் மேம்பாலம் மற்றும் ரவுண்டானா போன்றவையும் இன்னும் கட்டப்படவில்லை என்று கூறினார்கள். இதையும் விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடருவேன்.
அரசால் நியமனம் செய்யப்பட்ட அதிகாரிகள் மக்கள் பிரச்சனைகளை, குறைகளை தீர்க்க பணியாற்ற வேண்டும். இதற்கு ஏன் அவர்கள் தயங்குகிறார்கள் என்பது தெரியவில்லை. என்னிடம் போனில் பேசிய ஒரு போலீஸ் அதிகாரி என்னை கைது செய்வதாக கூறினார். முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள்.
மக்கள் பாதுகாப்பு கழகம் என்ற அமைப்பை ஏற்கனவே நான் தொடங்கி உள்ளேன். வருகிற சட்டசபை தேர்தலில் 234 தொகுதியிலும் எங்கள் அமைப்பின் சார்பில் சமூக ஆர்வலர்கள் போட்டியிடுவார்கள். காங்கிரசும், த.மா.காவும் இணைந்து செயல்பட்டால் நான் அந்த கட்சியுடன் இணைந்து செயல்படுவேன்.
ஹெல்மெட் போட வேண்டும் என்று கோர்ட் உத்தரவு போட்டது போல தமிழ்நாட்டில் மதுக்கடைகளையும் மூட வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.