ஜெ. விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி மனுத்தாக்கல்!
டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதாவை விடுதலை செய்ததை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்தும் அவரை விடுதலை செய்தும் கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த 11-ந் தேதி தீர்ப்பு அளித்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி நேற்று ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதா பெற்ற கடன் தொகை பற்றி தவறாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த தவறால் சொத்துக்குவிப்பு குறித்த விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது. இப்படி தவறான கணக்கு மற்றும் விகிதாச்சாரத்தினால் அவர் விடுதலை பெறுவதற்கு தகுதியற்றவர். ஜெயலலிதா தரப்பின் பல முறைகேடான பணப்பரிமாற்றங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
அவருக்கு எதிரான மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. இதனால் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு டிராபிக் ராமசாமி மனுத்தாக்கல் செய்துள்ளார்.