துண்டிக்கப்பட்ட பூந்தமல்லி- ஆவடி போக்குவரத்து தொடங்கியது.. 19 நாட்களுக்கு பிறகு
சென்னை: வெள்ளத்தால் சேதமடைந்த வீரராகவாபுரம் தரைப்பாலம் சரிசெயயப்பட்டதையடுத்து,19 நாட்களுக்கு பிறகு பூந்தமல்லி - ஆவடி வழித்தடத்தில் போக்குவரத்து தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பூந்தமல்லி பகுதியில் கடந்த 2-ம் தேதி பெய்த கனமழையால் கூவம் ஆற்று கால்வாயில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டது. இதில் பூந்தமல்லி - ஆவடி சாலையில் உள்ள வீரராகவாபுரம் தரைப்பாலம் உடைந்து சேதம் அடைந்தது. இதனால் பூந்தமல்லி - ஆவடி இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் பள்ளிக்குப்பம், மாதிராவேடு, சுந்தரசோழபுரம், பருத்திப்பட்டு வழியாக சுமார் 7 கிலோ மீட்டர் வரை சுற்றி சென்றன.
மேலும், கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனங்கள் பல மணி நேரம் ஊர்ந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் அவதி அடைந்தனர். இந்த நிலையில் உடைந்த தரைப்பாலத்தில் ராட்சத குழாய்கள் அமைத்து நெடுஞ்சாலைத்துறையினர் தற்காலிக பாலம் அமைத்துள்ளனர். இன்று காலை இந்த வழித்தடத்தில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. கனரக வாகனங்கள் மட்டும் செல்லஅனு மதிக்கப்படவில்லை.