சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு.. சென்னை ஈசிஆரில் போக்குவரத்து திடீர் நிறுத்தம்
சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் நிலையில் சென்னை ஈசிஆரில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை: ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிழக்குக் கடற்கரைச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அரசுப் பேருந்துகள் மட்டுமே அந்த சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. கார் உள்ளிட்ட வாகனங்களை போலீஸார் தீவிரமாக சோதனையிட்டு பிறகு அனுப்புகின்றனர்.
ஈசிஆரில் உள்ள கூவத்தூரில்தான் அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அந்த ரிசார்ட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மன்னார்குடி கும்பல் குவிக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே புகார் உள்ளது. இவர்கள் ரவுடித்தனத்தில் ஈடுபட்டு வருவதாகவும் உள்ளூர் மக்கள் புலம்பிக் கொண்டுள்ளனர்.
தீர்ப்பு சசிகலாவுக்கு பாதகமாக வந்தால் சென்னையில் குவிக்கப்பட்டுள்ள ரவுடிக் கும்பல் வன்முறையில் ஈடுபடலாம் என சென்னை மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வன்முறை நிகழாமல் தடுக்க ஈசிஆரில் போக்குவரத்து நிறுத்தம் என தகவல்கள் கூறுகின்றன. தற்போது இச்சாலையில் சென்னை- புதுச்சேரி இடையே அரசுப் பஸ் போக்குவரத்து மட்டுமே நடக்கிறது.