அது என்ன 9?.. ஷங்கருக்கு வேற எண்ணே தெரியாதா??.. திருநங்கை ஆயிஷா பாரூக் பாய்ச்சல்!
சென்னை: ஐ படத்தில் திருநங்கைகளை இழிவுபடுத்தும் விதமான காட்சிகளை வைத்த இயக்குநர் ஷங்கருக்கு திருநங்கை ஆயிஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:
இயக்குனர் ஷங்கரின் "ஐ" யும் திருநங்கைகளும்:
ஐ திரைப்படம் வெளியாகி என்னுடைய சக திருநங்கை சகோதரிகள் எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் செய்தும் போராடியும் வருவதை கண்டு அந்த திரைபடத்தில் அப்படி என்ன திருநங்கைகளுக்கு அவமானம் தேடி தரும் அல்லது மனம் புண்படும் விடையம் என்ன உள்ளது என்பதை கண்டறிய திரைப்படம் காண சென்றேன். இயக்குனர் ஷங்கர் ஒரு முன்னணி இயக்குனர் என்கிற அடையாளத்தோடு சமூக அக்கறை மிக்க கருத்தாக்கங்களை திரையில் வெளிபடுத்தியவர் என்கிற நினைப்பு என் மனதில் உள்ளது. அவருடைய இந்தியன், அந்நியன், முதல்வன் போன்ற திரைப்படங்கள் என்னை இன்றளவும் கவர்ந்த படங்கள்.
திருநங்கைகளை காலம் காலாமாய் திரைப்படங்களில் அவமானதுக்கூரிய பொருளாக சித்தரித்து பல படங்கள் வந்தாலும் ஒரு சில சொற்ப படங்கள் மட்டுமே கண்ணியாமாக வெளிக்காட்டியுள்ளது.
ஷங்கரின் ஐ படம் வெளிபடுத்திய பல விஷயங்கள் என்னை மிகவும் வருத்தத்துக்கு உள்ளாகியது.
1. ஐ திரைபடத்தில் திருநங்கையை அறிமுகப்படுத்திய முதல் காட்சியே கிண்டலுடன் ஆரம்பித்தது. "ஊரோரம் புளியமரம்" என்ற பாடலுடன் கதாநாயகனும் அவன் நண்பனும் சேர்ந்து கிண்டல் செய்வார்கள். இதில் வரும் திருநங்கை பிரபலமான ஹேர் ஸ்டைலிஸ்டாக காண்பித்தாலும் ஏன் இந்த கிண்டல் காட்சி பதிய வேண்டும். ஆக சமுதாயத்தில் எத்தகைய உயர் நிலையில் திருநங்கை இருந்தாலும் கேலி கிண்டலுக்கு உகுந்தவர்கள் தான் என்பதை மெய்பிப்பது போல இந்த காட்சி உணர்த்துகிறது.
2. திருநங்கை கதாபாத்திரம் ஏதோ உடல் பசிக்கு மிகவும் அலைவது போலவும் விரசமாக பெண்களே முகம் சுளிக்கும் வகையில் காட்சிகள் அமைத்தது வேதனையானது. உடல் பசி அனைவருக்கும் இயற்கையாக உள்ள தேவை. ஏதோ எங்களுக்கு மட்டும் தான் அதிகபடியான தேவையாக சித்தரிப்பது தேவையற்ற விஷயம்.
3. திருநங்கையின் காதலை வெளிப்படுத்தி அதை மிகவும் அருவருக்கத்தக்க விஷயம் போல கதாநாயகன் வெளிபடுத்துவதும் " என்ன எழவுடா, என்ன கருமாந்திரம்.. ஏன் எச்சை பண்ற" (பொம்பளைங்க கொடுத்தா முத்தம், நாங்க கொடுத்த அது எச்சையா) இது போன்ற வசனங்களுடன் அடுத்தடுத்து காட்சி அமைத்து எங்களின் காதல் உணர்வை காயபடுத்தியது மிகவும் வேதனையான விஷயம். இது போன்ற காட்சிகளை காணும் இளைஞர்கள் மற்றும் எங்களின் ஆண் நண்பர்கள் எங்களின் காதல் உணர்வை எவ்வாறு மதிப்பீடு செய்வார்கள் என்பதை உங்களின் கணிப்புக்கே விட்டுவிடுகிறேன்.
4. திருநங்கை அட்மிட் ஆன வார்டு எண் ஏன் 9 ஆக காண்பிக்க வேண்டும்...? ஷங்கருக்கு வேற எண் தெரியாதா ?
சரி இது வெறும் திரை கதாபாத்திரம் தானே, ஏன் இதற்கு இத்தனை ஆர்பாட்டம்.. படம் என்பது பொழுதுபோக்கு தானே.. இதை ஏன் சீரியஸ் ஆக எடுக்க வேண்டும் என்று நண்பர்கள் நினைப்பது தெரிகிறது. திரையில் உள்ளதை பார்த்து தான் திருநங்கைகளை பற்றி எந்த புரிதல் இல்லாத ஆசாமிகள் ஓ இவங்க இப்படி தான் போல என்று நினைப்புக்கு வருவது எளிதான ஒன்று. இந்த நினைப்பு எங்களை அவர்களிடமிருந்து வேறுபடுத்தி எங்களை சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைக்கும். உடனே ட்ரைன்ல பிச்சை எடுப்பது, கடையில் காசு கேட்பது, பாலியல் தொழில் என்று திருநங்கைகளை ஒப்பிட்டு குறைகூறி சமாளிக்க பார்க்கும் நபர்களே ஒரு நிமிடம் சமூகத்தில் நிலவும் சரிவர வாழ்வு நிலை வாய்ப்பு கிடைக்காத திருநங்கைகள் அந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதை சமூக அக்கறையுடன் உணருங்கள்.
ஷங்கர் கனமான திருநங்கை கதாபாத்திரம் அமைத்து கடைசியில் படம் பார்க்க வரும் எங்களை வேதனைக்கு ஆளாக்கிவிட்டார் என்பதே உண்மை. அன்று பொழுதோட கோழி என்று கூவியவர்கள் இன்று ஊரோரம் புளியமரம் பாடிய மாற்றத்தை தவிர இவர்களின் திரை அறிவு வளர்ச்சி கேவலமாக தான் போய்கொண்டு இருக்கிறது.