பென்ஷனுக்காக நடையாய் நடக்கும் 55,000 டிரைவர்கள், கண்டக்டர்கள்... ரூ. 800 கோடி பாக்கி என புகார்
சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சுமார் 55,000 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தங்களது ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பயன்களைக் கேட்டு அல்லாடிக் கொண்டிருக்கிறார்களாம்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்தவர் சிவஞானம். அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக பணியாற்றிய இவர், கடந்த 2008ம் ஆண்டு மரணமடைந்தார். இவரது மனைவி ஜெயக்கொடி, கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக கணவரின் ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பயன்களைப் பெறுவதற்காக அல்லாடிக் கொண்டிருக்கிறார்.
கடலூர் மாவட்டம் ஆண்டித்தோப்பைச் சேர்ந்த ராமச்சந்திரன், கடந்த 2009ம் ஆண்டு ஓட்டுநர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்விற்குப் பின் அரசு தர வேண்டிய தனது ஓய்வூதியப் பலன்களைப் பெறுவதற்காக படாத பாடு பட்டார். கடைசியில் ஓய்வூதியப் பலன்களைப் பெறாமலேயே அவர் மரணமடைந்தார். தற்போது அவரது மனைவி ராதா, கணவரின் ஓய்வூதியப் பலன்களைப் பெறுவதற்காக கணவரின் பாதையில் நடையாய் நடந்து வருகிறார்.
55,000 ஊழியர்கள்...
மேற்கூறிய இரண்டும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் தான். இவர்களைப் போல 2008-க்குப் பிறகு ஓய்வுபெற்ற சுமார் 55 ஆயிரம் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் தங்களுக்கு கிடைக்கவேண்டிய 800 கோடி ரூபாய்க்காக அலையோ அலையென அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
அவலம்...
முதுமை காரணமாக அரசு பணியில் இருந்து ஓய்வு கிடைத்து விட்டாலும், உழைப்பின் பலனை அனுபவிக்க முடியாமல் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்க வேண்டிய அவலநிலை இவர்களுக்கு.
போராட்டம்...
கடந்த மாதம் 18ம் தேதி சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமான ஓய்வு பெற்ற தொழிலாளர்கள், சென்னை பல்லவன் இல்லம் முன்பு போராட்டம் நடத்தினார்கள். எப்பவும் போல, நிதி வந்ததும் சீனியாரிட்டிப்படி கொடுப்போம் என பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் பண்ணி அனுப்பி விட்டது நிர்வாகம்.
கண்ணீரோடு காத்திருப்பு...
தனியாரிடம் வேலை பார்த்து ஏமாந்தால் அரசிடம் முறையிடலாம், அரசே ஏமாற்றினால் என்ன செய்வது என புலம்பி வருகின்றனர் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள். பிள்ளைகள் கைவிட்ட நிலையில் ஓய்வூதியத்தை மட்டுமே நம்பி இருக்கும் சிலர், தங்களின் ஈமச்சடங்கிற்காவது அந்தப் பணம் வந்து சேருமா எனக் கண்ணீரோடு காத்திருக்கின்றனர்.