சில பேர் இயற்கையால் இல்லை... சில பேர் இயக்கத்தில் இல்லை... யாரை சொல்கிறார் திருச்சி சிவா
சென்னை: சில பேர் இயற்கையினால் இல்லாமல் போனார்கள். சில பேர் இயக்கத்தில் இல்லாமல் போனார்கள் என்று அழகிரியை மறைமுகமாக திருச்சி சிவா விமர்சனம் செய்தார்.
கருணாநிதிக்கு பிறகு திமுக தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் ஸ்டாலின். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று பொதுக்குழுவில் வெளியானது.
முன்னதாக பொதுக் குழுவில் கருணாநிதி, வாஜ்பாய் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் திருச்சி சிவா எம்பி கூறுகையில் 1968-இல் ஸ்டாலின் தன் பயணத்தை தொடங்கினார். அவசர நிலை காலம் ஒரு அக்னிபரீட்சை காலம்.
வலம் வந்தால்
சிறைவாசம் மட்டுமில்லாமல் அடியும் உதையும் பட்டு தியாக சீலராக வந்த ஸ்டாலின் இளைஞரணி என்ற கப்பலுக்கு தலைமை மாலுமி ஆனார். கப்பலின் தலைவனாக மாறி அப்போது அவர் தமிழ்நாட்டையே வலம் வந்ததால் ஏற்பட்ட தாக்கம் இன்னும் அடங்கவில்லை.
இளைஞர்கள்
தமிழக மக்களிடம் உள்ள கருத்து என்னவென்றால், மென்மையான, நிதானமான ஆனால் உறுதியான தலைவர் ஸ்டாலின் என்பதுதான். அவர் பதற்றப்படுவதில்லை. உணர்ச்சிவசப்படுவதில்லை. இந்த போக்கை இளைஞர்கள் விரும்புகிறார்கள்.
கடைபிடிக்கப்பட்டது
அந்த காலகட்டத்தில் மன்னர்கள் அடுத்து முடிசூடும் இளவரசர்களை மகுடம் சூட்டுவர். கையில் கொஞ்சம் பொருள் கொடுத்து ஒரு குதிரையில் ஒரே ஒரு நண்பனோடு இன்னார் என்று அடையாளம் காட்டி கொள்ளாமல் சாதாரண வழிபோக்கனை போல் சென்று வருமாறு கூறுவார்கள். பல ஊர்களுக்கு செல்லும் அவர்கள் அல்லல்பட்டு, அடிபட்டு, நடந்து, தனது நாட்டின் பொருளாதாரம் நாட்டு மக்களின் நிலை ஆகியவற்றை பார்த்து விட்டு நாடு திரும்பும்போது நாடாளும் நிலை வந்தால் பிரச்சினைகளை கையாள்வான் என்பது அந்த காலத்தில் கடைபிடிக்கப்பட்டது ஆகும்.
வெளியீடு
கருணாநிதி ஸ்டாலினுக்காக இளைஞரணியை உருவாக்கினார். அந்த காலத்தில் இளவரசர் ஒரு நண்பனோடு சென்றார். ஸ்டாலின் ஒரு குழுவோடு ஊர் ஊராக சென்றார். சுற்றுப்பயணத்தின் போது தொடங்கினோம், தொடர்வோம் என்ற புத்தகத்தை தலைமை கழக வெளியீடாக கையிலே சுமந்து சென்று ரூ1-க்கு விற்றோம்.
நம்முடன் இல்லை
அந்த பயணத்தில் பலர் பேர் இருந்தோம். இன்று சில பேர் நம்மோடு உலகத்தில் இல்லை. பொய்யாமொழி, பொன்மொழி, குமரி லட்சுமி காந்தன் , தூத்துக்குடி சொக்கலிங்கம், நெல்லை ஜம்புநாதன், ஈரோடு எவரெஸ்ட் கணேசன் , சிதம்பரம் கலைசெல்வன் ஆகியோர் இன்று நம்முடன் இல்லை.
ஒதுங்கி கரை சேர்ந்தார்
ஸ்டாலினுடைய பயணம் தொடர்ந்தது. இதுஇயற்கைதான். ஒரு பயணத்தை தொடங்கும் போது இருக்கும் அத்தனை பேரும் அந்த பயணத்தின் வெற்றியின் போது இருப்பதில்லை. சில பேர் இயற்கையினால் இல்லாமல் போனார்கள். சில பேர் இயக்கத்தில் இல்லாமல் போனார்கள். சில பேர் இந்த அரசியல் நீரோட்டத்தில் எதிர்நீச்சல் போட முடியாமல் ஒதுங்கி கரை சேர்ந்தார்கள்.
பொறுப்புணர்ச்சி
ஆனால் தளராமல் ஸ்டாலின் ஓடினாரே , அந்த 40 ஆண்டுகாலம் அவருடன் ஓடி வந்தவன் என்ற உணர்வு என்னிடம் உண்டு. ஸ்டாலினை அணு அணுவாக நாங்கள் பார்த்துள்ளோம். பெரியவர்களை அவர் மதிக்கும் பாங்கு, ஏற்று கொண்ட கடமையை நிறைவேற்றும் போதும் இருக்கும் பொறுப்புணர்ச்சி. ஒரு யானை நடக்கும்போது நிதானமாக, அழுத்தமாக, ஆனால் உறுதியாக அடியெடுத்து வைக்கும்.
எத்தனை தலைவர்கள்
இது சாதாரண இயக்கம் அல்ல. அடுத்த முதல்வர் நீங்கள்தான். நாடு எதிர்பார்க்கிறது, நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் அதையும் தாண்டி பேரியக்கத்துக்கென்று லட்சியங்கள் பல இருக்கின்றன. அதையெல்லாம் வென்றெடுக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது. பெரியாருடன், அண்ணாவுடன், கருணாநிதியுடன் நடந்து வந்த பேராசிரியர், ஸ்டாலினை பக்கத்தில் உட்கார வைத்து முத்தம் கொடுத்தார். இதை எத்தனை தலைவர்கள் செய்வர்.
ராஜேந்திர சோழன்
ராஜராஜ சோழன் சோழனின் வரலாறு சோழர் குல வரலாற்றில் மறக்க முடியாத வரலாறு. சாதனைகள் பல புரிந்தவர். பல போர்களில் வெற்றி கண்டவர். போர் அதன் மூலம் வெற்றி , அதன் மூலம் நாடு விரிவாக்குவது என உருவாக்கியவர். ஆனால் அவனையும் கடந்த அரபிக் கடல் முழுவதும் சோழ நாட்டினரின் கடற்படையை உருவாக்கியவர் அவரது மகன் ராஜேந்திர சோழன் என்பதை போல் ராஜ ராஜ சோழனாக தலைவர் வலம் வந்தார். ராஜேந்திர சோழனை போல் ஸ்டாலின் சரித்திரம் படைப்பார்.
அண்ணா அறிவாலயம்
ஸ்டாலின்தான் முதல்வர் என்று அனைவரும் சொன்னார்கள். ஆனால் நான் ஒரு படி மேலே போய் சொல்கிறேன். இந்தியாவின் அடுத்த பிரதமரை தீர்மானிப்பவர் ஸ்டாலின்தான். இந்திய நாட்டின் அரசியல் பாதை எந்த பக்கத்தில் போவது என்பதை தீர்மானிக்கும் இடம் அண்ணா அறிவாலயமாகத்தான் இருக்கும். அறிவாலயத்தில் இருந்து உரிமை முரசு ஒலிக்கட்டும். இங்கிருந்து நீங்கள் எடுக்கும் தீர்மானங்கள் இந்த நாட்டின் அரசியலை திகைக்க வைக்கட்டும். எங்களிடம் இருக்கும் வியர்வை, ரத்தத்தை தருகிறோம், வெல்லுங்கள் என்றார் திருச்சி சிவா.