சூரத் மேயரின் உறவினர் கொலை வழக்கு- சேலம் நீதிமன்றத்தில் மூவர் சரண்!
சேலம்: குஜராத் மாநிலத்தின் சூரத் நகர மேயரின் உறவினரை கொலை செய்த வழக்கில் திருநெல்வேலி, தூத்துக்குடியைச் சேர்ந்த மூன்று பேர் சேலம் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.
குஜராத் மாநிலம் சூரத் லால்சர்வேஜா பகுதியில் தமிழர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். அங்கு ஹோட்டல், டீக்கடை, தள்ளுவண்டி கடைகள் வைத்து வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மே 10ந் தேதி தமிழர்கள் இருதரப்பினரிடையே அங்கு மோதல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சூரத் மாநகராட்சி மேயரின் உறவினரான குபேந்திரபாய் சோமாபாய் பட்டேலிடம் ஒருதரப்பினர் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சோமாபாய்பட்டேல் இந்த விவகாரத்தில் தலையிட்டு பஞ்சாயத்து செய்திருக்கிறார்.
இந்த பஞ்சாயத்து முடிவில் சோமாபாய் பட்டேல் கத்தியால் குத்தப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து சோமாபாய் பட்டேல் கொலை வழக்கில் தூத்துக்குடி ஆறுமுக செல்வன், கோவில்பட்டி ராஜா, சங்கரன்கோவில் குருசாமி ஆகியோர் தேடப்பட்டனர்.
இந்த நிலையில்தான் மூவரும் நேற்று திடீரென சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். தற்போது இவர்கள் சரணடைந்திருப்பது குறித்து குஜராத் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.