துப்பாக்கி முனையில் மிரட்டல்.. நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி.. என்ன சொல்கிறார் துரைமுருகன்?
தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான வெற்றி துப்பாக்கி முனையில் பெறப்பட்டதை போன்றது என்று திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
சென்னை: கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏ-க்களை சிறைப்பிடித்து வைத்துக் கொண்டு தமிழக சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக அரசின் வெற்றியானது துப்பாக்கி முனையில் பெற்றதற்கு சமமாகும் என்று திமுக மூத்த தலைவர் துரைமுருகன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது தி.மு.க.வினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
சென்னை, காஞ்சிபுரம், சேலம், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் கூட்டணிக் கட்சியினரும் கலந்து கொண்டுள்ளனர்.
காஞ்சிபுரத்தில் போராட்டம்
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் காந்தி சாலை பெரியார் நினைவு தூண் அருகே நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில் தி.மு.க. முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிந்திக்க விடவில்லை
உண்ணாவிரத போராட்டத்தில் துரைமுருகன் பேசியதாவது: அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை சிந்தனை செய்ய விடாமல் கூவத்தூர் என்ற தனி காட்டில் அடைத்து வைத்திருந்தனர். அவர்களின் செல்போன்கள் பறிக்கப்பட்டு அவர்களுடனான வீட்டு தொடர்பும் துண்டிக்கப்பட்டது. அவர்களை வேறு வகையில் கவனம் செலுத்த விடாமல் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்குப்பெற வைத்து பெற்ற வெற்றியானது துப்பாக்கி முனையில் பெற்றதற்கு சமம்.
தாக்கப்பட்டோம்
சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அல்லது வாக்கெடுப்பை ஒருவார காலத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என்றுதான் கூறினோம். ஆனால் இதனை சபாநாயகர் ஏற்கவில்லை. இதனை கண்டித்த தி.மு.க. உறுப்பினர்கள் அவை காவலர்களால் தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளோம். பிரதான எதிர்க்கட்சிகள் இல்லாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது ஜனநாயக படுகொலை என்றார்.
எப்படி பேசினாலும் சிக்கல்
கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக புகார்கள் வந்தபோது சில எம்.எல்.ஏக்கள் வெளியே வந்து தாங்கள் சுதந்திரமாக இருப்பபதாக பேட்டியளித்தனர். அப்படியானால், இந்த களேபரத்திற்கு நடுவே ரிசார்ட்டில், உல்லாசமாக இருக்கவா எம்.எல்.ஏக்கள் சென்றனர் என்ற கேள்வியை சமூக வலைத்தளங்களில் மக்கள் முன் வைத்து வருகிறார்கள். எந்த பக்கம் போனாலும், கேட் போடுறாங்களே என்ற நிலைமையில் சிக்கியுள்ளது ஆளும் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.