கெடு விதிப்பு எதிரொலி- இன்னோவா காரை அதிமுக அலுவலகத்திலேயே திருப்பி ஒப்படைத்த நாஞ்சில் சம்பத்!
ஜெயலலிதா வழங்கிய இன்னோவா காரை அதிமுக அலுவலகத்தில் திரும்ப ஒப்படைத்தார் நாஞ்சில் சம்பத்.
Recommended Video
சென்னை: இன்னோவா காரை ஒப்படைக்கும்படி அதிமுக தலைமை அலுவலகம் கேட்டுக்கொண்டதை அடுத்து அந்த காரை டிடிவி தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் திருப்பி ஒப்படைத்து உள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன் மதிமுகவில் இருந்து விலகி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் நாஞ்சில் சம்பத். அவரை கழக பேச்சாளராக அறிவித்ததோடு, அவருக்கு இன்னோவா கார் ஒன்றையும் ஜெயலலிதா பரிசாக வழங்கினார்.
இதனால் அவருக்கு சமூக வலைத்தளங்களில் இன்னோவா சம்பத் என்று அழைக்கப்பட்டார். ஜெயலலிதா வழங்கிய காரை தேர்தல் பிரச்சாரத்திற்காகவும், கட்சிப்பணிகளுக்காகவும் மட்டுமே நாஞ்சில் சம்பத் பயன்படுத்தி வந்தார்.
இந்நிலையில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளராக பதவியேற்றதை அடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்னோவா காரை அதிமுக அலுவலகத்தில் விட்டுச்சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.
பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால், சசிகலாவோடு சமாதானம் ஆன நாஞ்சில் சம்பத் மீண்டும் இன்னோவா காரை பெற்றுக்கொண்டார். இப்போது அவர் டிடிவி தினகரன் ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு கட்சியில் இருந்து அதிகாரப்பூர்வமாக நாஞ்சில் சம்பத் நீக்கப்படார். இதனையடுத்து அதிமுக சார்பாக ஜெயலலிதா வழங்கிய காரை திரும்ப ஒப்படைக்குமாறு அதிமுக சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நாஞ்சில் சம்பத் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் தனக்கு வழங்கப்பட்ட இன்னோவா காரை மீண்டும் ஒப்படைத்தார்.