கணவர் நடராஜனை பார்க்க சிறையில் இருந்து வருகிறார் சசிகலா; 15 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பம்: தினகரன்
பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா நாளை பரோலில் விடுக்கப்பட வாய்ப்புள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா நாளை பரோலில் விடுக்கப்பட வாய்ப்புள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டில் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சசிகலாவுக்கு பரோல் கோரி விண்ணப்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
உடல்நலக்குறைவால் கவலைக்கிடமாக உள்ள தனது கணவர் நடராஜனை பார்க்க அனுமதி கோரி சசிகலா பரோல் கேட்டுள்ளதாகவும் தினகரன் தெரிவித்தார். சசிகலாவுக்கு நாளை பரோல் கிடைக்க வாய்ப்புள்ளதகாவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
15 நாட்கள் பரோல்
சசிகலா 15 நாட்கள் பரோல் கேட்டிருக்கிறார் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார். சசிகலா கணவர் நடராஜனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாகவும் டிடிவி தினகரன் கூறினார்.
தாங்கள் தான் தாய்க்கழகம்
மேலும் பேசிய அவர் தாங்கள் தான் தாய் கழகம் என்றும் கூறினார். தாங்கள் யாருடனும் சேர வேண்டியதில்லை என்றும் தினகரன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
நடுநிலையோடு செயல்படவேண்டும்
அவர்கள் தான் எங்களுடன் வந்து சேர வேண்டும் என்றும் அவர் கூறினார். தமிழகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் நடுநிலையோடு செயல்படுவார் என நம்புவதாகவும் தினகரன் தெரிவித்தர்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு யோகம்
முதல்வர் பதவிக்கு வர எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென யோகம் அடித்ததாகவும் அவர் கூறினார். அதனால் தான் அவர் முதல்வராகியுள்ளார் என்றும் டிடிவி தினகரன் விமர்சித்தார்.
எடப்பாடிக்கு சவால்
எவ்வளவு தூரம் செல்கிறார்களோ செல்லட்டும், எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்து பார்க்கட்டும் என்றும் தினகரன் தெரிவித்தார். வீரத்தமிழனாக இருந்தால் சசிகலா கொடுத்த முதல்வர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்யட்டும் என்றும் தினகரன் சவால் விடுத்தார்.
டெங்குவை விட கொடிய அரசு
எடப்பாடி தலைமையிலான அரசுக்கு அறுதி பெரும்பான்மை இல்லை என்பது உலகத்திற்கே தெரியும் என்ற அவர் டெங்குவால் பலர் இறப்பதை பற்றி ஆட்சியாளர்களுக்கு துளியும் கவலையில்லை என சாடினார். டெங்குவை விட கொடியது எடப்பாடி பழனிசாமி அரசு என்றும் டிடிவி தினகரன் விமர்சித்தார்.