காஞ்சி சங்கரமடம் போன டிடிவி தினகரன்- ஜெயேந்திரருடன் ஆலோசித்தது என்ன?
அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், காஞ்சி சங்கரமத்திற்கு சென்று ஜெயேந்திரருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
சென்னை: காஞ்சிபுரம் சங்கரமடத்திற்கு டிடிவி தினகரன் திடீர் விசிட் அடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஜெயேந்திரர், விஜயேந்திரரிடம் ஆசி பெற்றதோடு இரண்டு மணிநேரம் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுக பிளவுபட்டு உள்ளது. சசிகலா ஆதரவுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி நடத்தி வருகிறார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கொடுக்கும் குடைச்சல் சசிகலா அணியை அதிகமாகவே குத்துகிறது.
சசிகலா பெங்களூரு சிறையில் இருந்தாலும் எண்ணமெல்லாம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. சசிகலா ஆதரவு பெற்றவர்கள், உறவினர்களையும் வழக்குகள் கழுத்தை நெரிக்கிறது. இந்த சூழ்நிலையில்தான் சசிகலா ஆலோசனைப்படி ஜெயேந்திரரை சந்தித்துள்ளார் டிடிவி தினகரன்.
ஜெயேந்திரருடன் ஆலோசனை
காஞ்சி சங்கரமடத்திற்கு நேற்று காலை 11 மணிக்கு வந்த டிடிவி தினகரன் 2 மணிவரை சங்கரமடத்தில் இருந்துள்ளார். ஜெயேந்திரருடன் தனிமையில் ஆலோசனை நடத்தியுள்ளார். ஒரு மணிநேர ஆலோசனைக்குப் பிறகே விஜயேந்திரர் சென்றாராம். இதன் பிறகு மூவரும் ஆலோசனை நடத்தியுள்ளனர். பின்னர் சத்தம் காட்டாமல் கிளம்பி சென்றாராம். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா - சசிகலா
காஞ்சி சங்கரமடத்துக்கும் காமாட்சி அம்மன் கோயில்களுக்கும் ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் வந்து ஆசி பெற்றுச் சென்றிருக்கிறார். காஞ்சிபுரத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வரதராஜப் பெருமாள் கோயிலில் அதன் மேலாளர் சங்கரராமன் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காஞ்சிமடத்தின் சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரரை அப்போதய ஜெயலலிதா தலைமையிலான அரசு கைது செய்தது.
ஜெயலலிதா உடன் விரோதம்
கடந்த 12 ஆண்டுகாலமாக ஜெயேந்திரர், விஜயேந்திரர் கோர்ட் படி ஏறி இறங்கினர். சங்கரராமன் கொலை வழக்கில் இருந்து இருவரும் விடுவிக்கப்பட்டனர். எனினும் ஜெயலலிதாவிற்கு சங்கரமடத்திற்கும் இடையேயான தூரம் அதிகமாகவே இருந்தது.
திடீர் விசிட் ஏன்?
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளரானார் சசிகலா. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இப்போது சசிகலா சிறையில் உள்ள நிலையில் டிடிவி தினகரன் திடீரென சங்கரமடத்திற்கு வந்து ஜெயேந்திரருடன் ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.