அரசியல் ஆதாயத்துக்காக நாங்க உதவி செய்யல.. அனிதாவின் வீட்டில் தினகரன் பேச்சு!
அனிதாவின் குடும்பத்துக்கு உதவி செய்தது எந்த அரசியல் ஆதாயத்தையும் எதிர்பார்த்து அல்ல என டிடிவி தினகரன் கூறினார்.
அரியலூர்: அரசியல் ஆதாயத்துக்காக நாங்கள் அனிதா குடும்பத்துக்கு உதவி செய்யவில்லை என தினகரன் குழுமூரில் செய்தியாளர்களிடம் கூறினார்.
அரியலூர் குழுமூரைச் சேர்ந்த அனிதா நீட் தேர்வால் மருத்துவர் கனவை இழந்து கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இந்த செய்தி மொத்த தமிழகத்தையும் அதிரச் செய்ததால் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன.

ஈநிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கள் ஒருமாத சம்பளத்தை அனிதாவின் குடும்பத்துக்கு நிதியுதவியாக அளித்தனர். இதனை தினகரனும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனும் அனிதா வீட்டுக்கு வந்து அனிதாவின் அப்பாவிடம் கொடுத்தனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், அனிதாவின் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று திருமாவளவனிடம் கேட்டபோது அவர் ஒப்புக்கொண்டு அவருக்கு இருந்த பல வேலைகளை விட்டுவிட்டு எங்களுடன் இங்கு வந்தார். இந்த உதவியை நாங்கள் அரசியல் ஆதாயத்துக்காக செய்யவில்லை.
அனிதாவின் மரணம் என்னை பாதிப்படைய வைத்தது. அப்போதே இதுகுறித்து நாங்கள் சிந்தித்தோம். அதன் பிறகு எம்.எல்.ஏக்களின் ஒரு மாத சம்பளத்தைச் சேர்த்து அனிதா குடும்பத்துக்கு கொடுக்க தீர்மானித்தோம். அதன்படி குடகில் இருந்த அத்துனை எம்.எல்.ஏக்களும் இங்கு வந்துள்ளோம். கருனாஸ் அவரது தாயாருக்கு உடல்நிலைச் சரியில்லை என்பதால் இங்கு வரவில்லை.
பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு கட்சி, மத மாச்சர்யங்களைத் தாண்டி ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் நம் மாநில உரிமைகளை இழக்காமல் இருக்க முடியும் என தினகரன் கூறினார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் உடன் இருந்தார்.












Click it and Unblock the Notifications