ஏப்.10ம் தேதி டிடிவி தினகரன் கண்டிப்பாய் ஆஜராக வேண்டும்.. நீதிபதி மலர்மதி உத்தரவு
அந்திய செலாவணி மோசடி வழக்கில் ஏப்ரல் 10ம் தேதி அன்று கண்டிப்பாய் டி.டி.வி. தினகரன் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி மலர்மதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: அந்நிய செலாவணி மோசடி வழக்கில் திங்கள் கிழமைக்குள் தினகரன் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி மலர்மதி உத்தரவிட்டுள்ளார். தினகரன் ஆஜராக இதுவே இறுதி வாய்ப்பு என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டிடிவி தினகரன் மீது 1996ம் ஆண்டு அமலாக்கத்துறை 2 அந்நிய செலாவணி மோசடி தொடர்பாக வழக்குகளை பதிவு செய்தது. இது தொடர்பாக வழக்கு எழும்பூர் பொருளாதார நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
1996ஆம் ஆண்டு, ஜெ.ஜெ. டிவிக்கு அப்லிங்க் சாதனங்கள் வாங்கியதில் மோசடி செய்ததாக, டி.டி.வி.தினகரன் மீது அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக, டி.டி.வி.தினகரன் மீது ஏழு வழக்குகள் தொடரப்பட்டன. இதில் இரண்டு வழக்குகளில் இருந்து டி.டி.வி.தினகரனை நீதிமன்றம் விடுவித்தது. மேலும், ஐந்து வழக்குகள் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
எழும்பூர் கோர்ட்டில் விசாரணை
இந்த வழக்கு விசாரணை கடந்த மாதம் நீதிமன்றத்திற்கு வந்த போது, டி.டி.வி.தினகரன் ஆஜராகவில்லை. மேலும், அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தேர்தல் பணியின் காரணமாக வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதற்கு, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்
மேலும், ஆர்.கே.நகர் தொகுதி வேட்புமனு மீதான பரிசீலனை உள்ளதால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும் நீதிமன்றத்தில் தினகரன் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து நீதிமன்றம் அவருக்கு விலக்களித்தது. இந்நிலையில், தேர்தல் முடியும் வரை வழக்கை ஒத்திவைக்கக் கோரி தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.
டிடிவி தினகரன் மனு தள்ளுபடி
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது டி.டி.வி. தினகரனின் மனுவை நீதிபதி மலர்மதி தள்ளுபடி செய்தார். வழக்கு விசாரணையை தொடர்ந்து நடைபெறும் என்றும் டி.டி.வி. தினகரன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதி அதிருப்தி
இந்த வழக்கு மீண்டும் இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது டி.டி.வி. தினகரன் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. இதில் கடுமையாக கோபம் அடைந்த நீதிபதி தனது அதிருப்தியை தெரிவித்தார். இதன் பின்னர், 5 மணி போல் தினகரனின் வழக்கறிஞர் ஆஜரானார். அப்போது பேசிய நீதிபதி, தொடர்ந்து ஆஜராகாமல் இருப்பது கண்டனத்திற்கு உரியது என்று கூறினார்.
எச்சரிக்கை
மேலும் வரும் 10ம் தேதி அன்று தினகரன் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி மலர்மதி கண்டிப்பாக கூறியுள்ளார். இதுதான் தினகரனுக்கு கடைசி வாய்ப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார். திங்கள் கிழமையும் தினகரன் வரவில்லை என்றால் ஜாமீனில் வெளி வரக் கூடிய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.