பதவி ஆசையில் மிதப்பவர்கள்... பெரியாரின் பொன்மொழிகள் மூலம் வெளுத்து வாங்கிய தினகரன்
பதவி ஆசையில் மிதப்பவர்கள் என்று எடப்பாடி அணி குறித்து பெரியாரின் பொன்மொழிகள் மூலம் தினகரன் சாடியுள்ளார்.
சென்னை: பதவி ஆசையில் மிதப்பவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக்கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறுவார்கள் என பெரியாரின் பொன் மொழிகள் மூலம் எடப்பாடி பழனிச்சாமி அணி குறித்து டிடிவி தினகரன் சாடியுள்ளார்.
அதிமுகவில் கட்சியையும் ஆட்சியையும் தக்க வைத்து கொள்ள எடப்பாடி அணியினரும், தினகரன் தரப்பும் கடுமையாக போராடி வருகின்றனர். இதனால் கடந்த சில மாதங்களாக இரு தரப்புக்கும் இடையே மோதல் வலுத்து வந்தது.
இந்த சூழலில் ஒருவரை மாற்றி ஒருவர் துரோகம் செய்துவிட்டதாக ஏசி கொண்டனர். அதிமுக இணைப்புக்கு பிறகு அது இன்னும் அதிகரித்தது. பொது குழு கூடி அதிமுக பொதுச் செயலாளர் என்ற பதவியே ரத்து செய்யப்பட்டவுடன் இன்னும் கொழுந்து விட்டு எரிந்தது.
முதல்வருக்கு எதிராக...
தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று கூறி ஆளுநரிடம் மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு அந்த எம்எல்ஏக்கள் பதிலளிக்கவில்லை.
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம்
இதைத் தொடர்ந்து அந்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் உத்தரவிட்டார். இதன்மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பு வைத்தாலும் வெற்றி பெறவே இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
பெரியார் மூலம்...
தன் சித்தி சசிகலாவால் கைகாட்டப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி இன்று தனக்கெதிராகவும், சசிகலாவுக்கு எதிராகவும் நடந்து கொண்டதை பார்த்து வேதனை அடைந்த தினகரன் தனது வேதனையையும் கோபத்தையும் பெரியாரின் பொன் மொழிகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 18, 2017 |
டுவிட்டரில் என்ன?
டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில் விடுதலையில் பெரியார் கூறிய கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில் பதவி ஆசையில் மிதப்பவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக்கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர்களிடம் சுயநலத்தை தவிர மனிதப் பற்றோ, நாட்டுப் பற்றோ சிறிதளவும் காணமுடியாது என்று விடுதலையில் கடந்த 1965-ஆம் ஆண்டு பெரியார் கூறியதை மேற்கோள்காட்டியுள்ளார்.