சட்டசபையில் வெடிக்கப்போகும் தினகரனின் பிரஷர் குக்கர்... கைவசம் இருக்கும் மாஸ்டர் பிளான் என்னென்ன?
எம்எல்ஏவாக பொறுப்பேற்ற ஒரு வாரத்திலேயே ஜனவரி மாதத்தில் சட்டசபைக்குள் சென்று அதிமுகவினருக்கு பிரஷர் கொடுக்க தினகரன் கைவசம் பல மாஸ்டர் பிளான்களை வைத்துள்ளதாக தெரிகிறது.
Recommended Video
சென்னை: ஆர்கே நகர் தொகுதியில் இருந்து சுயேச்சை எம்எல்ஏவாக சட்டசபைக்கு சென்றுள்ள தினகரன், பொறுப்பேற்ற ஒரு வாரத்திலேயே சட்டசபையில் ஆளுநர் உரையுடன் தொடங்கும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இந்த சட்டசபை கூட்டத் தொடரின் போது தினகரன் எப்படி செயல்படப் போகிறார் என்பது அனைவருக்குமே ஆவலாக இருக்கிறது, மற்றொரு புறம் தினகரன் அதிமுகவினருக்கு பிரஷர் கொடுக்கும் அதிரடி பிளான்களை அரங்கேற்ற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் டிடிவி. தினகரன் நேற்று தனது ஆதரவாளர்களுடன் சென்று எம்எல்ஏவாக பொறுப்பேற்றார். தினகரன் பதவியேற்பையொட்டி வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அனைத்திலும் வருங்கால முதல்வரே என்ற வாசகங்கள் பின்னிப் பெடலெடுத்தன.
தினகரன் பதவியேற்பால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக உள்ளனர். தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்ந்த வழக்கு ஹைகோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில் தினகரன் ஜனவரி 8ம் தேதி ஆளுநர் உரையுடம் தொடங்கும் சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
முதல்வர் பழனிசாமிக்கு தொடர்ந்து எதிர்ப்பு
மக்கள் விரோத துரோக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும், மார்ச் மதத்திற்கு பிறகு ஆட்சி இருக்காது என்று தொடர்ந்து சொல்லி வருகிறார் தினகரன். நேற்று பதவியேற்புக்குப் பின்னர் செய்தியாளர்களுடன் பேசும் போது இதைக் கூறி இருந்தார். மார்ச் மாத பட்ஜெட் கூட்டத்தின் போது முதல்வர் பழனிசாமி தனது ஆட்சிக்கான பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான ஓட்டெடுப்பு நடந்தே தீரும் என்றும் தினகரன் கூறினார்.
சட்டசபையில் எப்படி பேசப்போறாரோ?
பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் போதே முதல்வர் பழனிசாமியை இடிச்சபுளி பழனிசாமி என்றும், அமைச்சர் ஜெயக்குமாரை மூட்டைப்பூச்சிக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று தினகரன் வெளுத்து வாங்குகிறார். சட்டசபையில் இவருடைய பேச்சு இதே போன்று இருந்தால், நிச்சயம் ஒழுங்கு நடவடிக்கை, வெளியேற்றல் படலம் என பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று தெரிகிறது.
அதிருப்தி எம்எல்ஏக்களை இழுக்க
மற்றொரு புறம் தினகரன் இந்த கூட்டத் தொடரின் போது தனது பக்கம் சாயத் தயாராக இருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் யார் என்ற பட்டியலையும் தயார் செய்யப் போகிறாராம். கட்சியும் சின்னமும் கிடைத்தாலும் மக்களின் செல்வாக்கு இல்லை இதனால் அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவோமா என்று சில எம்எல்ஏக்கள் இரட்டை மனநிலையில் உள்ளதாக தெரிகிறது.
ஆட்சியை கவிழ்க்கும் பிளான்
இவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் நடவடிக்கைகளை இந்த கூட்டத் தொடரின் போது தினகரன் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது. இதே போன்று கட்சியில் முக்கியத்துவம் இல்லை, முதல்வர், துணை முதல்வர் எந்தப் பிரச்னைகளிலும் தங்களை கலந்து ஆலோசிப்பதில்லை என்று சில எம்எல்ஏக்கள் வருத்தத்தில் உள்ளதாக தெரிகிறது. இதோடு ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாலும் அதிருப்தியில் இருப்பவர்களுடன் ரகசிய பேச்சுகளையும் நடத்தி ஆட்சியை கவிழ்க்க தினகரன் பிளான் வைத்துள்ளதாக கூறப்படுகிறது