ஹைகோர்ட்டிலும் தினகரன் சகாக்களுக்கு 'கல்தா'... 40 அரசு வக்கீல்கள் அதிரடி நீக்கம்!
அதிமுகவில் இருந்து தினகரன் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டது போல, அரசு சார்பில் நீதிமன்றங்களில் வழக்குகளில் வாதாடி வந்த 40 பேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
சென்னை : அதிமுகவில் இருந்து தினகரன் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டது போல, அரசு சார்பில் நீதிமன்றங்களில் வழக்குகளில் வாதாடி வந்த 40 பேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்குப் பின்னர் டிடிவி. தினகரனின் அமோக வெற்றியையடுத்து அதிமுக சார்பில் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தினகரன் வெற்றிக்கு காரணமாக இருந்த முக்கியமான நபர்களான சி.ஆர். சரஸ்வதி, நாஞ்சில்சம்பத், புகழேந்தி உள்ளிட்டோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து மேலும் நில நிர்வாகிகளும் டிடிவி. தினகரனுக்கு செயல்பட்டதால் கட்சி விதியை மீறி செயல்பட்டவர்கள் என்று அவர்களை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக உத்தரவிட்டது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அரசு சார்பில் ஆஜராகி வாதாடி வந்த 40 பேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கறிஞர்கள் சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அவர்கள் மீது இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த 40 வழக்கறிஞர்களுக்கு மாற்றாக 100 புதிய வழக்கறிஞர்கள் அரசு தரப்பு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.