மாணவி அனிதா வீட்டுக்கு சென்று ஆறுதல்.. ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கிய தினகரன்!
அனிதா குடும்பத்தினருக்கு உதவுவதற்காக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களாக இருந்த திரட்டப்பட்ட ரூ.15 லட்சம் அக்குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.
அரியலூர்: நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்தினருக்கு டிடிவி தினகரன் தரப்பு எம்எல்ஏக்களாக இருந்த ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கினர்.
அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்தவர் அனிதா. பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வால் அவருக்கு மருத்துவம் படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த அவர் கடந்த செப் 1-ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் அனிதாவின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ரூ.7 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்குவதாக அறிவித்தார். அதற்கான காசோலையை அனிதாவின் குடும்பத்தினரிடம் கொடுப்பதற்காக ஆட்சியர் சென்ற போது நீட் தேர்வை ரத்து செய்தால் மட்டுமே நிதியுதவியை பெற்று கொள்வோம் என்று அனிதாவின் குடும்பத்தினர் தெரிவித்துவிட்டனர்.
அனிதாவின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக டிடிவி தினகரன் ஆதரவு தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் நிதி திரட்டி வந்தனர். அதன்படி திரட்டப்பட்ட ரூ.15 லட்சத்தை அனிதாவின் குடும்பத்தினரிடம் அளித்தனர்.
இன்று அனிதாவின் வீட்டுக்கு தினகரனுடன் அவரது ஆதரவு எம்எல்ஏக்களாக இருந்த 18 பேரும் சென்றிருந்தனர். அங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் சென்றிருந்தார்.