ரொக்கம்... டோக்கன்... தங்கக் காசு... பாண்டி சரக்கு... தினகரனின் திரிசூல வியூகம்!
சென்னை: ஆர்கே நகரில் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் எல்லா கட்சிகளும் களம் இறங்கியிருப்பதால் காலை 6 மணிக்கெல்லாம் பிரசாரம் தொடங்கி விடுகிறது. இரவு பத்து மணி வரை நீடிக்கிறது. ஐந்து பிரதான சாலைகள் இருக்கின்றன ஆர்கே நகரில். மற்றவை எல்லாம் அவற்றை இணைக்கும் குறுக்குத்தெருக்களும் சந்துகளும் தான்.
ஆர்கே நகரில் போடப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்திற்கு தினமும் இரவு 10 மணிக்கு பிரசாரம் முடிந்தபிறகு ஆஜராகி விடுகிறார் தினகரன். அவர் தலைமையில் அமைச்சர்கள், நிர்வாகிகள் பங்குபெறும் மீட்டிங் நடக்கிறது. அடுத்த நாளுக்கான பிரசார திட்டத்தை வகுக்கிறார்கள்.
ஞாயிறு இரவு நடந்த கூட்டத்தில் பேசும்போது தினகரன் சற்று நம்பிக்கையிழந்தே பேசியிருக்கிறார். 'எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஆனால் ஜெயிக்க வேண்டும்' என்று சொன்னவரிடம் கட்சிக்காரர்கள் புலம்பித் தள்ளியிருக்கிறார்கள். 'இங்கே நேரடியாக வேலை பார்க்க ஆள் இல்லை. தொகுதியை சேர்ந்தவர்கள் எல்லாம் ஓபிஎஸ் பக்கம்தான். ஆட்கள் இல்லாமல் எப்படி வேலை பார்ப்பது?' என்று கேட்டதற்கு வெளியூரில் இருந்து ஆட்களை ஏற்பாடு செய்வதாக சொல்லியிருக்கிறார் தினகரன்.
ஆள் கிடைக்கலையே தல!
திவாகரனோடு மோதலில் இருப்பதால் ஆட்கள் இல்லாமல் சிரமப்படுகிறார் தினகரன். தஞ்சாவூரில் இருந்தும் தேனிப் பகுதியில் இருந்தும் சுமார் 500 பேரை இறக்கியிருக்கிறார்கள். இன்னும் ஆட்களை எதிர்பார்த்திருக்கிறார்கள். எல்லோருக்கும் தினமும் ஆயிரம் ரூபாய் என்று வாராவாரம் கொடுக்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறார்கள்.
கோடிக்கணக்கில் பணம் பாஸு!
இரண்டு மூன்று இடங்களில் பணம் பிடிபட்டிருக்கிறது. அதுவும் வெறும் லட்சக்கணக்கில். ஆனால் முதல் தவணையே கோடிக்கணக்கில் தான் இறங்கியிருக்கிறது. பிரசார ஊர்வலத்தில் உடன் வருவதற்கு பெரியவர்களுக்கு 500 உம் சிறுவர்களுக்கு 200 உம் தரப்படுகிறது. குடும்பத்தோடு வந்தால் ஸ்பெஷல் கவனிப்பும் உண்டு.
பூராம் பாண்டி சரக்குப்பா!
ஆரத்தி எடுக்க 1000 ரூபாய். முதல் கட்ட தவணையாக 5000 ரூபாய்க்கான டோக்கன் தரப்படுகிறது. அதைக் கொண்டு சென்றால் முக்கிய கடைகளில் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். தொகுதி முழுக்கவே பாண்டிச்சேரி சரக்குக்கும் பஞ்சம் இல்லை. கட்சிக்காரர்களுக்கு தாராளமாக வழங்கப்படுகிறது.
தெருவுக்கு ஒரு ஸ்டூண்ட்!
தினகரன் அணியில் வேலை பார்ப்பது எல்லாம் வெளியூர் ஆட்கள் என்பதால் உள்ளூர் வீடுகளுக்கு சென்று அறிமுகம் செய்துகொள்வதில் சிக்கல் உள்ளது. இதனை நிவர்த்தி செய்ய தெருவுக்கு ஒரு கல்லூரி மாணவரைத் தேர்வு செய்து அவர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று கவனிப்பு நடத்துகிறார்கள்.
டோக்கன் வாங்கிக்கங்க
டோக்கன் வாங்கும் ஆட்களின் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண் குறிக்கப்பட்டு இதற்கென உருவாக்கப்பட்டுள்ள டேட்டாபேஸில் ஏற்றப்படுகிறது. வாங்கியவர்களே வாங்காமல் இருக்கவும், யாரும் விடுபட்டு போகாமல் இருக்கவும் இந்த ஏற்பாடு. கடந்த வாரத்தில் ஒரு நாள் இரவு 11 மணிக்கு கேணியம்மன் கோவிலை திறந்து அமைச்சர்களும் அவர்களது ஆட்களும் டோக்கன்கள் கொடுத்திருக்கிறார்கள். இதனை அறிந்த ஓபிஎஸ் அணி அங்கே காவல்துறையினருடன் சுற்றி வளைத்திருக்கிறது. அமைச்சர்கள் எஸ்கேப் ஆக, பெயர் விவரங்கள் குறிக்கப்பட்ட நோட்டுகள் அகப்பட்டுள்ளன.
ரொம்ப யோசிக்கும் பறக்கும் படை
அந்த நோட்டுகளில் 250 பேரின் பெயர்களும் வாக்காளர் அடையாள அட்டை விபரங்களும் இருந்திருக்கின்றன. குழுமியிருந்த மக்களோ ‘குடிசை மாற்றுவாரிய வீடுகள் ஒதுக்கீடுக்காக வந்திருக்கிறோம் என்று ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்திருக்கிறார்கள். முதலில் இதனைப் புகாராக ஏற்க மறுத்த பறக்கும் படை அதிகாரி செந்தில்குமார் ஓபிஎஸ் ஆட்கள் பிரச்னை செய்ததால் வாங்கிக்கொண்டார்.
கொருக்குப்பேட்டையில் 7 லட்சம்
இதேபோல் கொருக்குப்பேட்டை பாரதி நகர் பகுதியிலும் கொடுக்கப்பட்டபோது 7 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இவை எல்லாவற்றையும் முழுமையாக வீடியோ எடுத்திருக்கிறது ஓபிஎஸ் அணி. எனவே தான் ஆர்கே நகர் காவல்துறை அதிகாரிகளையும், தாசில்தாரையும் மாற்றக் கோருகிறது ஓபிஎஸ் அணி.
தங்கம் போச்சா.. இப்படியும் சிலர்!
தங்கம் தரப்போவதாகக் கேள்விப்பட்டோம். இப்போது பணமும் டோக்கனும் தந்தால் தங்கம் கிடையாதா? என்ற ஏக்கம் மக்களிடையே இருக்கிறது. தங்கம் ஆர்டர் தந்தபோது ஒரு கிராம் காசாக கொடுத்திருக்கிறார்கள். அது போதாது என்பது போட்டி தொடங்கியபிறகு தெரிய வந்துள்ளதால் தங்கத்தை ஓட்டுப்பதிவுக்கும் முதல் நாள் இரவு தரலாம் என்று திட்டம். அதற்கு முன்பாக இந்த பட்டுவாடா.
அவிங்களும் கொடுப்பாய்ங்க.. நம்பிக்கையில் பலர்!
தினகரன் தரப்பு பட்டுவாடாவைத் தொடங்கிய நிலையில் ஓபிஎஸ் தரப்பும் திமுக தரப்பும் அதை வெளிக்கொண்டு வருவதில்தான் அக்கறை காட்டுகிறார்கள். ஆரத்தி தட்டுகளில் நூறு ரூபாய் நோட்டுகள் விழுகின்றன. இது தவிர உடன் வரும் கட்சிக்காரர்கள் கவனிக்கப்படுகிறார்கள். இன்னும் நேரடியாக வினியோகம் தொடங்கவில்லை. அவர்களும் கொடுப்பார்கள். தேர்தல் நெருங்கும் சமயத்தில் கிடைக்கும் என எதிர்பார்த்திருக்கிறார்கள் தொகுதி மக்கள்.