தூத்துக்குடி: திடீர் ரெய்டு படாதபாடு படும் டாஸ்மாக் ஊழியர்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக்கில் தொடர்ந்து முறைகேடு நடந்து வருவதால் 34 பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திடீர் திடீர் என விஜிலென்ஸ் சோதனை நடப்பதால் ஊழியர்கள் கிலி அடித்து கிடக்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளர் அலுவலத்தின் கீழ் 197 டாஸ்மாக் கடைகளும், 160க்கும் மேற்பட்ட பார்களும் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக அடிக்கடி புகார்கள் வந்ததால் உயர் அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்ய உயர் மட்ட குழுவை அமைத்தனர்.
இந்த குழுவினர் தூத்துக்குடி சிப்காட்டில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் மற்றும் அதன் அருகே உள்ள குடோனிலும் தீவிர தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் பல நூதன முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் கலாவதியான மதுபாட்டில்களை மீண்டும் மீண்டும் பல டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பி வைத்து முறைகேடு செய்ததன் மூலம் ரூ.4.93 கோடி வரையில் வருவாய் இழப்பு ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக இதுகுறித்து அறிக்கையை சென்னைக்கு அனுப்பினர். முறைகேட்டில் ஈடுபட்ட மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
தொடர்ந்து நடந்த விசாரணையில் முதலில் 4 பேரும், பிறகு 9 டாஸ்மாக் ஊழியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அடுத்த கட்டமாக ஒரே நாளில் தூத்துக்குடி டாஸ்மாக்கில் பணியாற்றி வந்த 18 பேர் சஸ்பெண்ட் ஆனார்கள்.
கடந்த மூன்று மாத காலத்தில் இதுவரை 34 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும் பல இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் சோதனை நடத்தப்பட இருப்பதால் அங்கு பணியாற்றி வரும் ஊழியர்கள் பலரும் அச்சத்தில் உள்ளனர். இந்த சஸ்பெண்ட் விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் நிர்வாகமே கலகலத்து போய் கிடக்கிறது.