மயிலாடுதுறையில் சோகம்.. கள்ளச்சாராயம் குடித்த 2 கூலித்தொழிலாளர்கள் பரிதாப உயிரிழப்பு!
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கள்ளச் சாராயம் குடித்த 2 கூலித்தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தி ஒழிக்க வருகிற ஜூன் 7-ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
மருந்தகங்கள், பால் பூத்கள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன டாஸ்மாக் கடைகளும் ஊரடங்கு காரணமாக அடைக்கப்பட்டுள்ளன.

கள்ளச் சாராய விற்பனை
டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் மது பிரியர்களை குறி வைத்து கள்ளச் சாராய விற்பனை பல்வேறு இடங்களில் கொடிகட்டி பறக்கின்றன. போலீசார் தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கள்ளச் சாராய விற்பனையை தடுத்து வந்தாலும், ஒரு சில இடங்களில் போலீசாரின் கண்ணில் மண்ணை தூவி விற்பனையை அரங்கேற்றி வருகின்றனர்.

கூலித்தொழிலாளர்களின் விபரீதம்
இப்படிபட்ட கள்ளச் சாராயம் 2 கூலித்தொழிலாளர்களின் உயிரை அநியாயமாக பறித்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடி பகுதியை சேர்ந்தவர் பிரபு (33). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான செல்வம் (36), சரத்குமார், வீராசாமி உள்ளிட்ட 5 நபர்களுடன் சேர்ந்து கள்ளச்சாராயம் குடித்துள்ளார்.

2 பேர் உயிரிழப்பு
ஆனால் சிறிது நேரத்திலேயே இவர்கள் அனைவருக்கும் கண்பார்வையில் பிரச்சினை உள்ளிட்ட உபாதைகளால் உடல்நிலை மோசமடைந்தது. இதனால் உடனடியாக இவர்கள் அனைவரையும் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் பிரபுவும், செல்வமும் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மக்கள் கோரிக்கை
மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்ட சரத்குமார், வீராசாமி உள்ளிட்ட 3 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications