சட்ட விரோதமாக “சிறுநீரக விற்பனை”- நாமக்கல்லில் இரண்டு பெண்கள் கைது
நாமக்கல்: நாமக்கல்லில் சட்ட விரோதமாக சிறுநீரக வியாபாரம் செய்த இரண்டு பெண்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி எல்லையிலுள்ள பெராந்தர்காட்டைச் சேர்ந்தவர் சேகர். அவரது மனைவி தங்கமணி. சேகர் ஒரு விசைத்தறித் தொழிலாளி.
இவர் அந்தப் பகுதியில் உள்ள மகளிர் குழுவில் உறுப்பினராகச் சேர்ந்து கடன் வாங்கி திரும்பச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டார். இதைக் கண்ட அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மனைவி ஈஸ்வரி, தங்கமணியை அணுகி ஒரு சிறுநீரகத்தைக் கொடுத்தால் ரூபாய் 3 லட்சம் பணம் தருவதாகவும், அதன் மூலம் அனைத்துக் கடனையும் அடைத்துவிட்டு வசதியாக நிம்மதியாக வாழலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
இதற்கு உடன்படுவதாக தெரிவித்த தங்கமணியை குமாரபாளையம் காந்திபுரத்தில் உள்ள பிரேமா என்பவரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.
இருவரும் தங்கமணியை சென்னைக்கு அழைத்துச் சென்று மற்றொரு தரகரான சங்கரிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் முதல்கட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு தங்கமணி வெளிநாட்டுக்குச் செல்ல பாஸ்போர்ட், விசா எடுக்கப் பட்டது.
இந்த நிலையில் தங்கமணியின் மற்றொரு சிறுநீரகத்தின் செயல்பாடு குறைந்துள்ளதாகவும், சிறுநீரகம் ஒன்றை தானம் கொடுத்தால் உயிருக்கு ஆபத்து என மருத்துவமனையில் தெரிவிக் கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த தங்கமணி சிறுநீரகத்தை தர மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் பிரேமாவும், ஈஸ்வரியும் தங்கமணி, சேகரை சென்னைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வெள்ளைத்தாளில் தங்கமணியிடம் சங்கர் கையெழுத்தை வாங்கிக் கொண்டு சிறுநீரகத்தை தர மறுத்து விட்டதால் இதுவரை செலவான தொகை ரூபாய் 40 ஆயிரத்தைத் தர வேண்டும் என மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து குமாரபாளையம் காவல் நிலையத்தில் தங்கமணி வெள்ளிக்கிழமை புகார் அளித்தார். இதையடுத்து பிரேமா, ஈஸ்வரியை போலீஸார் கைது செய்தனர். மேலும், சென்னையில் உள்ள தரகர் சங்கரைத் தேடி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் குமாரபாளையம் பகுதியில் 100க்கும் மேற்பட்டோர் பணத்துக்காக சிறுநீரகம் விற்பனை செய்ததாக தெரியவந்துள்ளது.