அனைத்து கோட்ட அலுவலகம் முன்பு நாளை குடும்பத்தினருடன் போராட்டம்... தீவிரமாகும் பஸ் ஸ்டிரைக்
அனைத்து கோட்ட அலுவலகம் முன்பு நாளை குடும்பத்தினருடன் போராட்டம் நடத்தப்படும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சென்னை: அனைத்து கோட்ட அலுவலகம் முன்பும் நாளை குடும்பத்தினருடன் போராட்டம் நடத்தப்படும் என்று சேப்பாக்கத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
2.57 சதவீதம் ஊதிய உயர்வு கோரி தமிழகம் முழுவதும் பேருந்து ஓட்டுநர்கள் 5-ஆவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், மறியலும் நடத்தப்படுகிறது. இதனால் பேருந்துகள் போதிய அளவு இயங்கவில்லை.
குறைந்த அளவிலான பேருந்துகளை அண்ணா தொழிற்சங்கத்தினரும், தற்காலிக ஓட்டுநர்களும், ஆட்டோ டிரைவர்களும் இயக்கி வருகின்றனர். இதனால் மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயணம் செய்கின்றனர்.
மாநில அரசும், நீதித் துறையும் அவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் ஊழியர்களோ போராட்டம் தொடரும் என்று கூறி வருகின்றனர்.
இந்நிலையில் சேப்பாக்கத்தில் இன்று தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், நாளை அனைத்து கோட்ட அலுவலகங்கள் முன்பும் குடும்பத்தினருடன் போராட்டம் நடத்தப்படும். அரசு தொடர்ந்த வழக்கை சட்டபடி எதிர்கொள்வோம்.
அரசு கௌரவம் பார்க்காமல் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். தற்காலிக பஸ் டிரைவர்கள் மூலம் பேருந்துகளை இயக்கவேண்டாம் என்றனர்.