மெர்சலில் சர்ச்சையான விமர்சனங்களை நீக்க வேண்டும்... பொன். ராதாகிருஷ்ணனும் போர்க்கொடி!
நாகர்கோவில்: மெர்சல் படத்திற்கு தமிழிசை சவுந்தரராஜனைத் தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடித்து தீபாவளிப் பண்டிகைக்கு வெளியான மெர்சல் திரைப்படத்தில் 28 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கும் இந்தியாவில் மருத்துவ வசதிகள் ஏன் இலவசமாக செய்து தரப்படவில்லை என்று ஒரு வசனம் இடம்பெற்றுள்ளது. மத்திய அரசின் திட்டம் குறித்து உண்மைக்கு மாறான வசனங்கள் மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் அதனை நீக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறிஇருந்தார்.
இதே போன்று பாஜக ராஜ்யசபா உறுப்பினர் இல. கணேசனும் தவறான கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பினால் இந்துக்கள் மெர்சலாகிவிடுவார்கள் என்று கூறி இருந்தார். மெர்சல் படத்தை விமர்சித்து தேவையின்றி விளம்பரம் தேடித் தர தான் விரும்பவில்லை என்றும் அவர் கூறி இருந்தார்.
இந்நிலையில் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மெர்சல் படத்தில் மத்திய அரசுக்கு எதிரான வசனங்கள் இடம்பெற்றிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். படத்தில் இடம்பெற்றுள்ள உண்மைக்கு மாறான வசனங்களை நீக்க வேண்டும்.
தான் சார்ந்திருக்கும் துறையை பயன்படுத்தி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேடக்கூடாது என்றும் அவர் கூறினார். மேலும் டெங்குவை கட்டுப்படுத்தாத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பது போல அரசுப் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.