விஜயகாந்தை சந்தித்தார் அமெரிக்க துணைத் தூதர் பிலிப் மின்
சென்னை: சென்னையில் உள்ள இந்தியாவிற்கான அமெரிக்கா துணை தூதர் பிலிப் மின் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சென்று சந்தித்துப் பேசினார்.
சட்டமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனுத்தாக்கல் செய்தவர்களிடம் அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் இரண்டாவது நாளாக நேர்காணல் நடத்தி வருகிறார். இதனிடையே கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வந்த இந்தியாவுக்கான அமெரிக்க துணைத் தூதர் பிலிப் மின் உள்ளிட்டோர் விஜயகாந்தை சந்தித்து பேசினர்.
சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின் போது அமெரிக்க துணை தூதரக அதிகாரிகள், தேமுதிக இளைஞரணி தலைவர் சுதிஷ், கொறடா சந்திரகுமார், எம்.எல,ஏ. பார்த்தசாரதி ஆகியோர் உடனிருந்தனர். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக அமெரிக்க துணை தூதரக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தேர்தலையொட்டி, அரசியல் கட்சி தலைவர்களை சந்திப்பது வாடிக்கை என்றும் அமெரிக்க தூதர அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. முன்னதாக, கடந்த 19-ம் தேதியன்று திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில், பிலிப் மின் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.