முதலில் உ.பி.யை பிரிக்கலாம்.. பிறகு தமிழ்நாடு பற்றி முடிவு எடுக்கலாம்.. சீமான் அதிரடி!
கும்பகோணம்: இந்தியாவின் பெரிய மாநிலமாக இருக்கும் உத்தரப் பிரதேசத்தை பிரிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கும்பகோணத்தில் 94 பள்ளி குழந்தைகள் தீயில் கருகி பலியான சம்பவத்தின் 18ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று காலை கட்சி நிர்வாகிகளுடன் சம்பவம் நடந்த பள்ளிக்கு வந்து மலர் வளையம் வைத்தும், தீப சுடர் ஏற்றியும் மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து சீமான் கூறுகையில், ஜூலை 16ம் நாளை குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்து, உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும். நடிகர் சங்கம் சார்பில் பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு நிவாரணம் அளிப்பதாக உறுதியளித்த போது, பல நடிகர்கள் சங்கத்திற்கு நிவாரண தொகையாக அளித்துள்ளனர். ஆனால் இதுவரை பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு நிவாரண தொகை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். இது குறித்து நடிகர் சங்க நிர்வாகிகளுடன் கலந்து பேசுவேன் என்று தெரிவித்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் கொரோனாவில் இருந்து நலம்பெற கே.பாலகிருஷ்ணன், சீமான், அண்ணாமலை, தினகரன் வாழ்த்து
தமிழ்நாடு பிரிக்கப்படுமா?
தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என கூறிய கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், முதலில் இந்தியாவின் பெரிய மாநிலமாக இருக்கும் உத்தரப் பிரதேசத்தை இரண்டாக பிரிக்கட்டும். அதன் பிறகு தமிழ்நாட்டைப் பிரிப்பது குறித்து முடிவு செய்யலாம் என்று பதிலளித்தார்.
நீட் தேர்வு
தொடர்ந்து நீர் தற்கொலை குறித்து பேசிய அவர், நீட் தேர்வு பயம் காரணமாக தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் நடக்கிறது. இங்கு மனித உயிருக்கு மதிப்பில்லை. உயிரை மாய்த்துக்கொள்வதால் ஒன்றும் சாதிக்கப்போவதில்லை. உயிரோடு இருந்து போராடிதான் அவர்கள் சாதிக்க வேண்டும். நீட் தேர்வால் இதுபோன்ற துயர சம்பவங்கள் இனி தொடரக்கூடாது. மாணவர்களை பெற்றோர்கள் பாதுக்காக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
புதிய கல்விக் கொள்கை
தொடர்ந்து நீட் தேர்வில் தோல்வி பயம் காரணமாக 12ம் வகுப்பு மாணவ - மாணவியர்களே உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். இந்த சூழலில் புதிய கல்விக் கொள்கையில், 3ம் வகுப்பு, 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புகளில் பொது தேர்வு என்றால் நம்முடைய மாணவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்று கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்ற கட்டுப்பாடு
தொடர்ந்து நாடாளுமன்றத்தில் வார்த்தைகள் கட்டுப்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் ஜனநாயகம் இல்லை. தேசபற்று, தேச ஒற்றுமை என்பதெல்லாம் பெரியளவிலேயே இருக்கிறது. விவாதிக்க படாமலேயே சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன, காவிரி நீர் பிரச்னையாகட்டும், நீட் தேர்வாகட்டும், நாம் ஒவ்வொரு விசயத்திற்காகவும், நம் உரிமையை பெற நீதிமன்றம் சென்றே தீர்வு காண வேண்டி அவல நிலையே நீடிக்கிறது என்று தெரிவித்தார்.