பணத்திற்கு ஆசைப்பட்டு விட்டேன்.. வி.சேகர் வாக்குமூலம்
சென்னை: பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசைதான் என்னைத் தவறு செய்ய தூண்டி விட்டு விட்டது என்று இயக்குநர் வி.சேகர் கூறியுள்ளார்.
சிலைத் திருட்டு வழக்கில் சிக்கி கைதாகியுள்ளார் வி.சேகர். பல அருமையான குடும்பப் படங்களை எடுத்துப் பிரபலமடைந்தவரான இவரது கைது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேகரா இப்படி என்று அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் தான் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டது ஏன் என்பது குறித்து போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார் வி.சேகர். அதில் அவர் கூறியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்:

வருமானம் இல்லை
குடும்பப் படங்களை எடுத்தவன் நான். அதை கொள்கையாகவே வைத்திருந்தேன். ஆனால் சமீப காலமாக எனக்கு போதிய வருமானம் இல்லை. மகனை வைத்து எடுத்து வரும் படத்தையும் முடிக்க முடியாமல் தவித்தேன்.

பண ஆசையில் தடுமாற்றம்
இந்த நிலையில்தான் கோவில் சிலை திருட்டுக் கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டது. சினிமாவில் உள்ள சிலர் மூலமே இந்தத் தொடர்பு ஏற்பட்டது. கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என்ற ஆசையில் பாதை தவறி விட்டேன்.

8 சிலைகள்
தற்போது கைப்பற்றப்பட்டுள்ள 8 சிலைகளும், பல்வேறு கோவில்களில் திருடப்பட்டவையாகும். எனது வீட்டில்தான் சில மாதங்களாக இவற்றை வைத்திருந்தேன். வெளிநாடுகளுக்கு அனுப்ப திட்டமிட்டு வந்தோம். அதற்குள் மாட்டி விட்டோம் என்று கூறியுள்ளாராம் சேகர்.

புரோக்கர்கள் கூட்டம்
இந்த சிலை கடத்தும் கும்பல் பெரிய நெட்வொர்க்காக செயல்பட்டுள்ளது. அடிக்கடி இதுதொடர்பான புரோக்கர்கள் கூட்டம் நடக்குமாம். அதில் சேகரும் கலந்து கொண்டுள்ளார்.

கப்பல் மூலம் கடத்தல்
திருடப்பட்ட சிலைகளை கப்பல் மூலமாக கடத்துவார்களாம். வெளிநாடுகளில் இந்த சிலைகளுக்கு நல்ல கிராக்கி இருப்பதால் கோடிக்கணக்கில் இதில் பணம் புரளுகிறதாம்.

10 பேர் கும்பல்
தற்போது பிடிபட்டுள்ளவர்கள், சிலைகளைத் திருடுபவர்கள் அல்ல. அந்தக் கும்பலில் 10 பேர் உள்ளனராம். அவர்களில் யாரும் இன்னும் பிடிபடவில்லை. அவர்களைப் பிடிக்க தீவிர வலை விரிக்கப்பட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications