யார் இந்த சு.சாமி?... வெகுண்டெழுந்த வைகோ
சென்னை: யார் இந்த சுப்பிரமணியம் சாமி.. அவரை நான் புறக்கணிக்கிறேன் என்று கோபமாகக் கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
பாஜக கூட்டணியில் மதிமுகவை சேர்த்ததை எதிர்த்து சுப்பிரமணியம் சாமி கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்டபோதுதான் இப்படிக் கருத்து தெரிவித்தார் வைகோ.
பாஜக கூட்டணியை வலுப்படுத்த பல முயற்சிகளை அக்கட்சி எடுத்து வருகிறது. தமிழகத்தில் மதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளை இணைத்து வலுப்படுத்த தீவிரமாக முயன்று வருகின்றனர்.

இதில் மதிமுக மட்டுமே எந்தவித குழப்பமும் இல்லாமல் கூட்டணியில் இணைந்துள்ளது. பாஜக தலைவர்கள் மதிமுக அலுவலகத்திற்கும், வைகோ, பாஜக அலுவலகத்திற்கும் சென்று கூட்டணியை ஸ்திரப்படுத்தியுள்ளனர். தொகுதி உடன்பாடும் முடிந்து விட்டதாகவே தெரிகிறது.
ஆனால் சுப்பிரமணியம் சாமி பாஜக - மதிமுக கூட்டணியை எதிர்த்து வருகிறார். இவர் சில காலத்திற்கு முன்பு வரை ஜனதாக் கட்சி என்ற கட்சியை தொடர்ந்து விடாப்பிடியாக நடத்தி வந்தவர். பாஜக அனுதாபியாகவும் இருந்தவர். பின்னர் தனது கட்சியை பாஜகவுடன் சேர்த்து விட்டார்.
தீவிர ஈழ எதிர்ப்பாளர் சாமி என்பது உலகம் அறிந்தது. எனவே தீவிர ஈழ அனுதாபியான வைகோ, பாஜக கூட்டணியில் இணைந்ததை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்தக் கூட்டணியால் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் அதிமுக ஜெயிக்கப் போகிறது என்று பேசியுள்ளார் சாமி.
இதுகுறித்து நேற்று பாஜக தலைமைக் கழக அலுவலகத்திற்கு வந்த வைகோவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதைக் கேட்டு கோபமடைந்த வைகோ, யார் அவர்? பாஜகவில் இருக்கிறாரா? அவரை நான் புறக்கணிக்கிறேன் என்றார் சற்றே வேகமாக.












Click it and Unblock the Notifications