வைகோ பரந்த மனசை பார்த்தீங்களா.. ஊருக்காக 5 ஏக்கர் நிலத்தை விட்டுக்கொடுத்தாராம்.. துரை வைகோ பெருமிதம்
தென்காசி: தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்காக அரசு ஒரு ஏக்கர் இடம் தேடிக் கொண்டிருந்த நிலையில், 1988ஆம் ஆண்டு 5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியவர் வைகோ என அவரது மகன் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
பிறந்த ஊருக்காக வைகோ தனது பூர்விக நிலத்தை அரசுக்கு தானமாக கொடுத்த தகவல் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்தச் சூழலில் இது தொடர்பாக மதிமுக தலைமைக்கழகச் செயலாளர் துரை வைகோ விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
ஏதோ என்னால முடிஞ்சத செய்றேன்.. நான் என்ன எம்பியா..எம்எல்ஏவா? ஓபானாகப் பேசிய மதிமுக துரை வைகோ!
கலிங்கப்பட்டி
''தென்காசி மாவட்டம், கலிங்கப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நமது இயக்க தந்தை தலைவர் வைகோ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.''
5 ஏக்கர் நிலம்
''கலிங்கப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் விரைவில் மேம்படுத்தப்பட்ட சுகாதார மையமாக மாற்றப்படும் என்ற உறுதியை அமைச்சர் மா.சுப்ரமணியன் அளித்தார். தலைவர் வைகோவின் பெரும் முயற்சியினால் 1988 ஆம் ஆண்டு சுற்று வட்டார மக்கள் பயன் பெறுகின்ற விதமாக கொண்டுவரப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு ஏக்கர் நிலம் வேண்டும் என அரசு இடம் தேடிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு ஏக்கர் நிலம் போதாது என்று கூறி தலைவர் குடும்பத்திற்கு சொந்தமான பூர்வீக நிலம் ஐந்து ஏக்கர் நிலத்தை, தொலைநோக்கு சிந்தனையோடு சுகாதார மையம் அமைய நிலத்தை தானமாக வழங்கினார் தலைவர் வைகோ.''
தேசிய தர உறுதி நிலைப்பாடு
''ஒன்றிய அரசின் சார்பில் வழங்கப்படும் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்திற்கான 2019 -20 ம் ஆண்டிற்கான தேசிய தர உறுதி நிலைப்பாடு சான்று ( National Quality Assurance Standard ) பெற்ற ஆரம்ப சுகாதார மையமாக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக தமிழக அரசின் காயகல்ப விருதினையும் பெற்றுள்ள ஆரம்ப சுகாதார மருத்துவ மையமாகவும் விளங்குகிறது. தற்போது மேம்படுத்தப்பட்ட சுகாதார மையமாக மாறுவதற்கு இது பெரும் உதவியாக உள்ளது.'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பெரிய விஷயம்
பிறந்த ஊருக்காக ஊர் மக்களின் நல்வாழ்வுக்காக பூர்விக நிலத்திலிருந்து 5 ஏக்கரை அரசுக்கு தானமாக கொடுத்திருக்கும் வைகோவின் செயல் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. தாம் பிறந்த ஊரையும், ஊர்மக்களையும் வைகோ எந்தளவு நேசிக்கிறார், நேசித்தார் என்பது இதிலிருந்தே தெரிகிறது.