மதிகெட்டான் சோலை அருகே நியூட்ரினோ ஆய்வகம் அமைவது சட்டவிரோதம்...வைகோ புது வழக்கு
தேனி: தேனி மாவாட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தேனி மாவட்டம், தேவாரம் அருகே பொட்டிபுரத்தில் இந்திய நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தடை விதிக்கவேண்டும்,'' என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ நீதிபதி முன் ஆஜராகி வாதிட்டார். அப்போது, ‘‘இதுபோன்ற 10 வழக்குகளில் தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம், பாரம்பரிய சின்னங்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
நியூட்ரினோ ஆய்வுமையம் குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்படவில்லை. தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெறவில்லை. ஆய்வுமையத்திற்காக பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. எனவே தற்போதைய நிலை நீடிக்க உத்தரவிடவேண்டும்,'' என வாதிட்டார்.
மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆஜராகி, ‘நியூட்ரினோ ஆய்வுமையம் குறித்து எதுவும் தெரியாமல் முன்கூட்டியே மனு செய்யப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கது அல்ல. இந்த மையம் அமைவதால் நன்மைதான் ஏற்படும். எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்' என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘இது முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு. மக்களை பாதிக்கும் விஷயம் என மனுதாரர் கூறுகிறார். ஆய்வுமையம் குறித்த தமிழக அரசின் பதில் திருப்திகரமாக இல்லை. திட்டம் குறித்து தமிழக அரசின் நிலை என்ன? திட்டம் வேண்டுமா, வேண்டாமா என எதையும் தெரிவிக்கவில்லை.
திட்டம் குறித்து தமிழக அரசு ஏதேனும் ஆய்வு செய்துள்ளதா? யாரிடமாவது கருத்து கேட்டுள்ளதா? தேனி மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் நியூட்ரினோ ஆய்வுமையத்தில் தகுதியான நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என கூறியுள்ளார். ஆய்வுமையத்தில் பணியாற்றும் அளவிற்கு பொட்டிபுரத்தில் விஞ்ஞானம் படித்தவர்கள் உள்ளனரா?
என்எல்சி மற்றும் பெல் நிறுவனங்களுக்காக நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டபோது, உள்ளுர் மக்களுக்கு வேலை வாய்ப்பளிக்கப்பட்டது. அதுபோல ஏதேனும் திட்டம் உண்டா? திட்டத்தால் பாதிப்பு ஏற்படுமா, ஏற்படாதா? நியூட்ரினோ திட்டம் குறித்து தமிழக அரசின் நிலை என்ன? இதுகுறித்து தமிழக அரசு விளக்கமான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும்,'' என உத்தரவிட்டனர். பின்னர் மனு மீதான விசாரணையை மார்ச் 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
வைகோ புதிய மனு
இந்த வழக்கு நீதிபதிகள் தமிழ்வாணன், ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமைக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ சார்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் நியூட்ரினோ ஆய்வு மையம் அருகே மதிகெட்டான் சோலை என்ற தேசிய பூங்கா அமைந்துள்ளதாகவும், இந்த பகுதியில் 10 கிலோமீட்டர் தொலைவுக்கு கட்டடங்கள் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்யுள்ளார்.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலையானது ஆறு ஆயிரம் பில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனவும், உலகின் மிகவும் பழமையான மலைத்தொடராகவும் யுனெஸ்கோ அறிவித்துள்ளதையும் வைகோ எடுத்து காட்டியுள்ளார்.
இத்தனை சிறப்பு வாய்ந்த மலைத்தொடரில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய தடை விதிக்க வேண்டும் எனவும் வைகோ வலியுறுத்தினார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.