போகப் போகத் தெரியும்: சூசகமாகக் கூறும் வைகோ
சென்னை: தேமுதிக, த.மா.கா. ஆகிய கட்சிகள் கூட்டு இயக்கத்தில் சேருமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு போகப் போகத் தெரியும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பதில் அளித்துள்ளார்.
மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் கூட்டு இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டசபை தேர்தலை சந்திப்பது, கூட்டு இயக்கத்தை பலப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் பிறகு வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், மக்கள் நலனைக் காக்க பாடுபடும் கூட்டு இயக்கம் சார்பில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மற்றும் பேரணிகளில் மக்கள் விரும்பி கலந்து கொள்கிறார்கள். மக்களுக்கு கூட்டு இயக்கத்தை பிடித்துள்ளது. ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் என்றார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
கேள்வி: கூட்டு இயக்கத்தின் தலைவர் யார்?
பதில்: கூட்டு இயக்கத்தில் இருக்கும் அனைவரும் தலைவர்கள் தான்.
கேள்வி: கூட்டு இயக்கம் கூட்டணியாகும் என்கிறீர்கள். அப்படி என்றால் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்?
பதில்: கூட்டு இயக்கம் கூட்டணியாக ஆகும்போது அது பற்றி அறிவிப்போம்.
கேள்வி: தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் உங்களின் கூட்டு இயக்கத்தில் சேருமா?
பதில்: எல்லாம் போகப் போகத் தெரியும்.












Click it and Unblock the Notifications