ஆதரவு கேட்டு ஆம் ஆத்மியை நாடி வந்த வைகோ.. தொண்டர்கள் எதிர்ப்பால் அதிர்ச்சி!
சென்னை: மக்கள் நலக்கூட்டணிக்கு ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவை பெற முடிவு செய்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று சென்னையில் உள்ள அககட்சியில் தலைமை அலுவலகத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் வைகோவின் வருகையை அறிந்த ஆம் ஆத்மி கட்சியினர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுகவுக்கு ஒரு மாற்று சக்தி என்ற பெயரில் உருவாகியுள்ள தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சியும் இணையப்போவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் விதமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,
இன்று காலை சென்னை தியாகராய நகர் கண்ணதாசன் சாலையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தார்.

வைகோவை ஆம் ஆத்மி கட்சியின் தமிழக பொறுப்பாளர் வசீகரன் சால்வை அணிவித்து வரவேற்றார். மேலும் புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார். வசீகரனுடன் வைகோ சுமார் 1 மணி நேரம் பேசினார்.
இதற்கிடையே கட்சி அலுவலகத்தில் வைகோ வந்துள்ள செய்தி அறிந்த தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியினர் தலைமை கழக பேச்சாளரும், தன்னார்வ தொண்டருமான தங்கசேகர், கிருஷ்ணவேணி, கிருஷ்ணமூர்த்தி உள்பட சிலர் கட்சி அலுவலகம் முன்பு நின்று வைகோவுக்கு எதிராக கோஷமிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

மக்கள் நலக் கூட்டணிக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு அளிக்க கூடாது என்று எதிர்ப்பாளர்கள் கோஷமிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியினர், ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்டது ஆம் ஆத்மி கட்சி. மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏற்கனவே ஊழல் செய்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்து உள்ளது.
அங்குள்ள கம்யூனிஸ்டு கட்சிகளும் ஊழலுக்கு துணைபோனவர்கள். அவர்கள் இப்போது கூட்டணி அமைத்தால் மட்டும் நல்லவர்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியாது. ஆம் ஆத்மி கட்சி நேர்மையானது. ஊழலுக்கு எதிரானது. எனவே மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு அளிக்க கூடாது. தனித்தே தேர்தலை சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

டெல்லியில் ஆட்சியமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலை கடந்த ஆண்டு வைகோ நேரில் சந்தித்து பேசினார். டெல்லியில் நடைபெற்ற போராட்டத்திலும் வைகோ, கெஜ்ரிவால் இணைந்து பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் மக்கள் நலக்கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி இணையுமா எல்லாம் கெஜ்ரிவால் கையில்தான் இருக்கிறது.
அப்போ பாண்டவர் அணி 6 பேர் அணியாகி விடுமா? அல்லது அர்விந்த் கெஜ்ரிவால் கிருஷ்ணரா?












Click it and Unblock the Notifications