தி.மு.க.வுக்கு போக யாருக்கெல்லாம் விருப்பமோ போங்க... வாழ்த்தி அனுப்புகிறேன்: வைகோ விரக்தி
நெல்லை: தி.மு.க.வுக்கு தாவ நினைக்கும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் செல்லலாம்.. அவர்களை வாழ்த்தி அனுப்புகிறேன் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விரக்தியுடன் கூறியுள்ளது அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ம.தி.மு.க.வின் திருப்பூர் மாநாட்டுக்கு மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமி வருகை தந்திருந்தார். அவருடன் 12 பேர் கொண்ட குழுவும் வந்திருந்தது.
இம்மாநாடு முடிந்த பின்னர் நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி கிராமத்துக்கு பினாங்கு துணை முதல்வர் ராமசாமி தலைமையிலான குழு சென்றது.
ஏமாற்றிவிட்டார் கருணாநிதி
அக்குழுவினரை வைகோவின் தம்பி ரவிச்சந்திரன் வரவேற்றார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய வைகோ, நான் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய போது, அன்புச் சகோதரா என்று அழைத்து தி.மு.க. தலைவர் கருணாநிதி கடிதம் எழுதினார். தனது இல்ல திருமண விழாவுக்கும் அழைத்தார். அதன் பின்பு ஏமாற்றிவிட்டார்.
மாறாத கருணாநிதி
கருணாநிதி, முன்புதான் அப்படி இருந்தார், இப்போது மாறிவிட்டார் என்று நினைத்தேன். அவர் மாறவே இல்லை.
வாழ்த்தி அனுப்புகிறேன்...
இப்போதும் கூட ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் 2 பேரை இழுத்துச் சென்றுள்ளார். யாரெல்லாம் போக வேண்டும் என்று எண்ணுகிறார்களோ, அவர்கள் எல்லாம் செல்லலாம். வாழ்த்தி அனுப்புகிறேன்.
அழிக்க முயற்சி
ம.தி.மு.க.வை கருணாநிதி அழிக்க முயற்சிக்கிறார். எனது வீட்டில் என் தந்தையார் திருவள்ளுவர் படம் மட்டும்தான் வைத்திருந்தார். நான் அரசியலுக்கு வந்த பிறகு, கருணாநிதி, க.அன்பழகன், எம்.ஜி.ஆர். உள்ளிட்டோர் படங்களை வைத்திருந்தேன். அதில் கருணாநிதி, அன்பழகன் படங்கள் தற்போது இல்லை. அகற்றிவிட்டேன்.
மோடிதான் காரணம்
பினாங்கு துணை முதல்வர் ராமசாமி, இந்தியாவிற்கு வர காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு நிரந்தர தடை விதித்து இருந்தது. தற்போது நான் கேட்டுக்கொண்டதால் பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு விசா அளித்தார். அதற்கு காரணம் பிரதமர் மோடி, என் மீது வைத்துள்ள நம்பிக்கை என்றார்,