எம்ஜிஆர் மீது வைகோவுக்கு வந்த திடீர் பாசம்.. சமாதி அரசியலின் அடுத்த அத்தியாயம்?
சென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவினையொட்டி மதிமுக பொதுச்செயளார் வைகோ சென்னையில் உள்ள அண்ணா, எம்ஜிஆர் நினைவிடங்களில் இன்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
மறுமலர்ச்சி தி.மு.க. நடத்தும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினையொட்டி வைகோ, தாயகத்தில் பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்தார். பின்னர் அண்ணா நினைவிடத்திலும், எம்.ஜி.ஆர். நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து நினைவு கூர்ந்தார்.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர். எனவே அவருக்கு நூற்றாண்டுவிழா 30ம் தேதி காமராஜர் அரங்கில் நடத்தப்பட உள்ளது. அதில் எம்.ஜி.ஆரோடு பழகிய நடிகை சரோஜாதேவி, ஆர்.கே.சண்முகம், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், புலமை பித்தன் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள் என ஏற்கனவே வைகோ அறிவித்திருந்த நிலையில், இந்த மரியாதை செலுத்துதல் நடந்துள்ளது.
பாசம், பரிவு
எம்.ஜி.ஆர் விஷயத்தில் வைகோவுக்கு ஏற்பட்டுள்ள இந்த திடீர் பாசம், காண்போர் கண்களை குளமாக்கியுள்ளது. எம்.ஜி.ஆர் ஈழத்தமிழர்களுக்கு செய்த நலன்களை அவ்வப்போது நினைவுகூறுவதோடு சும்மா இருந்த வைகோ இப்போது சூறாவளியாக மாறி சமாதி அரசியலுக்கு தானும் சளைத்தவர் அல்ல என களம் புகுந்துள்ளார்.
சமாதி அரசியல்
ஓ.பி.எஸ் சமாதி தியானம், சசிகலாவின் சமாதி சத்தியம், தீபாவின் சமாதி தியானம்-குற்றச்சாட்டு பேட்டி என சமாதியை முன்வைத்து நடைபெறும் தமிழக அரசியலுக்கு தான்மட்டும் விதிவிலக்கு அல்ல என்ற கோணத்தில் இவர் தேர்ந்தெடுத்துள்ளது எம்.ஜி.ஆர் சமாதியை போலும்.
எம்ஜிஆர் பங்கு
ஜெயலலிதாவின் இமேஜை பங்குபோட ஓ.பி.எஸ்., டிடிவி தினகரன், தீபா என ஆளுக்கொரு பக்கம் அடித்துக் கொண்டிருக்கும் நிலையில், சும்மா இருக்கும் எம்.ஜி.ஆர் இமேஜை தான் எடுத்துக்கொள்ள களம் கண்டுள்ளார் வைகோ என்று சிரிக்கிறார்கள் பிற கட்சியினர். இதைப்பார்த்த அதிமுகவின் நாஞ்சில் சம்பத் நறநறவென சத்தம் வரும் அளவுக்கு பல்லை கடித்தபடி இருப்பதாக சொல்கிறார்கள். எம்.ஜி.ஆர் சமாதிக்கு சென்றதற்காக எப்போது பேஸ்புக்கில் வசைபாடி வறுத்தெடுக்கப்போகிறாரோ வைகோவின் இந்த முன்னாள் சீடர் தெரியவில்லை.
எதிர்த்து பேசியவர்
எம்ஜிஆர் அதிமுக தொடங்கியபோது திமுகவின் பிரசார பீரங்கியாக வலம் வந்தவர் வைகோ. பல மேடைகளில் எம்ஜிஆரை இடித்துரைத்துள்ளார். "கருணாநிதியின் பக்தன் என்ற கண்மூடித்தனமான மனப்பாங்கால் எம்ஜிஆரை மேடைகளில் கடுமையாக விமர்சித்தேன்" என்று அறிக்கையொன்றில் வைகோவே ஒப்புதல் வாக்குமூலமும் அளித்துள்ளார். அத்தகைய வைகோ இன்று எம்ஜிஆர் சமாதியில் அஞ்சலி செலுத்துவதும், அவருக்காக விழா நடத்துவதும் நகை முரண்.