வட இந்தியாவில் தமிழக மாணவர்கள் மர்ம மரணம் - சிபிஐ விசாரணை கேட்கும் வைகோ
டெல்லியில் மருத்துவ உயர்கல்வி கற்கின்ற தமிழ்நாட்டு மாணவர்களின் உயிர் பாதுகாப்பு குறித்து, தமிழக மக்களிடம் அச்சமும், கவலையும் ஏற்பட்டு இருக்கின்றது என்று வைகோ கூறியுள்ளார்.
சென்னை: வட இந்தியாவில் மர்மமான முறையில் மரணமடைந்த 3 தமிழக மாணவர்களின் மரணத்திற்கு சிபிஐ விசாரணை தேவை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
சண்டிகரில் உள்ள மத்திய அரசு மருத்துவ ஆராய்ச்சிக் கல்லூரியில், உயர்கல்வி படித்து வந்த கிருஷ்ண பிரசாத் என்ற மாணவரின் மர்ம மரணம் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நட்டாவிற்கும் கடிதம் எழுதி உள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த கிருஷ்ண பிரசாத் என்ற மாணவர், தகுதி அடிப்படையில் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து முடித்து, மத்திய அரசின் உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில், சண்டிகரில் உள்ள அறுவை மருத்துவத்தில் மேல்படிப்பு பயில, தகுதி அடிப்படையில் இடம் பெற்று, கடந்த ஆறு மாதங்களாகப் படித்து வந்தார்.
மர்ம மரணம்
2018 பிப்ரவரி 26 காலையில், மர்மமான முறையில் இறந்து கிடந்தார் என்ற செய்தி அறிந்து, அவரது பெற்றோரும் குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சிக்கு ஆளாயினர். இறந்துபோன கிருஷ்ண பிரசாத், ஒரு வாரத்திற்கு முன்னர் தனது பெற்றோரிடம், இந்தி மொழியில் பேசுவது சற்றுச் சிரமமாக இருக்கின்றது என்று கூறி இருக்கின்றார்.
மாணவர் சரவணன் கொலை
இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு மாணவர்கள், டெல்லியில் மருத்துவ உயர்கல்வி வகுப்பில் சேர்ந்த சில நாள்களில் மர்மமான முறையில் மரணம் அடைந்த விபரீதத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன். 2016 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி, தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்ற மாணவர், தகுதி அடிப்படையில் எம்பிபிஎஸ் படித்து முடித்து, அதே தகுதியில் டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் மருத்துவ மேல்படிப்புக்குச் சேர்ந்த பத்தாம் நாள், அவர் தங்கி இருந்த அறையில், மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
விஷம் செலுத்தி கொலை
உடல் பரிசோதனையில், அவரது வலது கை தமனி நரம்பில் தடித்த ஊசி கொண்டு, நஞ்சு செலுத்தப்பட்டதால் அவர் உயிர் இழந்தார் என்று தெரிவித்தது. சரவணன் இடது கை பழக்கம் உடையவர் அல்ல. எனவே, வலது கை தமனி நரம்பில், அவராகவே அந்த ஊசியைச் செலுத்த வாய்ப்பு இல்லை என்று மருத்துவ அறிஞர்கள் கூறுகின்றார்கள். அவர் தங்கி இருந்த அறையில் ரத்தத் துளிகள் தரையில் சிந்தி இருந்தன.
மேற்படிப்புக்கு காலி இடம்
காலி பாட்டில்கள் எதுவும் காணப்படவில்லை. வலுக்கட்டாயமாக அவரது கையில் ஊசி மூலம் நஞ்சு செலுத்திக் கொல்லப்பட்டார் என்பதை ஊகிக்க முடிகின்றது. டெல்லி மருத்துவக் கல்லூரிகளில் மேல்படிப்புக்கு இடம் கிடைக்காதவர்களால் இவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம்; அதன் மூலம் அந்த வகுப்பில் காலியாகும் இடத்தை வேறு ஒருவர் கைப்பற்றிக் கொள்ள வாய்ப்பு உள்ளது.
சரவணன் மரணம்
2018 ஜனவரி மாதம், இதேபோல அதிர்ச்சிதரத்தக்க மரணம் டெல்லியில் நிகழ்ந்துள்ளது. தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரத் பிரபு என்ற மாணவர், தகுதி அடிப்படையில் எம்பிபிஎஸ் படித்து முடித்து தில்லி தில்ஷாத் கார்டனில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி கற்று வந்தார். ஜனவரி17 ஆம் தேதி காலையில் கழிவறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சரவணன் மரணத்தில், எந்தவிதமான முறையில் அவர் சாகடிக்கப்பட்டாரோ, அதே முறைதான் சரத் பிரபு மரணத்திலும் மேற்கொள்ளப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
கொலை செய்யப்பட்டிருப்பார்
இந்தப் பின்னணியில், இராமேஸ்வரத்தைச் சேர்ந்த கிருஷ்ண பிரசாத் மரணமும், இயற்கையாக நடைபெறவில்லை. அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பது தெளிவாகின்றது.
3 மாணவர்கள் மரணத்திற்கு விசாரணை
டெல்லியில் மருத்துவ உயர்கல்வி கற்கின்ற தமிழ்நாட்டு மாணவர்களின் உயிர் பாதுகாப்பு குறித்து, தமிழக மக்களிடம் அச்சமும், கவலையும் ஏற்பட்டு இருக்கின்றது. எனவே, மேலே குறிப்பிட்ட மூன்று மாணவர்களின் மரணம் குறித்தும், மத்திய குற்றப் புலனாய்வுத்துறை விசாரணை மேற்கொள்ள தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் எனது கோரிக்கை நீங்கள் செயல்படுத்துவீர்கள் என நம்புகிறேன்.