கூட்டணி கட்சியினர் போட்ட வாய்ப்பூட்டு.. அடக்க ஒடுக்கமாக மாறிய ஆக்ரோஷ வைகோ
சென்னை: சர்ச்சை பேச்சுக்களை பேசி வந்த மதிமுக பொதுச்செயலாளரும், மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ தற்போது கடிவாளம் போட்ட குதிரை போல பாதையை விட்டு விலகாமல் பயணித்துக் கொண்டுள்ளார்.
மக்கள் நல கூட்டணி அமைந்த பிறகு, வைகோவை கையில் பிடிக்க முடியவில்லை. அவ்வளவு உத்வேகம். இந்த வீரா வேசத்தில் வார்த்தைகளை அள்ளி தெளித்து கோலம் போட்டார். அது கடைசியில் அலங்கோலமாக முடிந்தது.
பல கோடி பணம் கன்டெய்னர் லாரிகளில் ஜெயலலிதாவின் கோடநாடு பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.
தா.பா.பதிலடி
தோழமை கட்சியை சேர்ந்த தா.பாண்டியனே, பணம் இருந்தால் வைகோவே பிடித்து கொடுக்கட்டுமே என்று பதிலடி கொடுத்தார்.
ஜாதி பேச்சு
இதேபோன்று கருணாநிதி குறித்து பேசுகையில் அவரது ஜாதியை கூறி விமர்சனம் செய்யும் அளவுக்கு, வாயில் வந்ததையெல்லாம் பேசினார் வைகோ.
குழப்பம்
வைகோ பேச்சுக்கு அவரது கூட்டணிக்குள் இருந்தே எதிர்ப்பு கிளம்பியது. ஆளாளுக்கு சாடியதை பார்த்தால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுவிட்டதோ என்று தோன்றும் அளவுக்கு இருந்தது.
கொள்கை, கோட்பாடு
கம்யூனிஸ்டுகளும், விடுதலை சிறுத்தைகளும் தங்களது கொள்கைக்கு மாறாக, ஆக்ரோஷ அரசியலை வைகோ கையில் எடுப்பதை ரசிக்கவில்லை. பதவிக்காக கம்யூனிஸ்டுகளும், வி.சிறுத்தையும் கொள்கைகளை விட்டுக்கொடுத்து விட்டதாக விமர்சனம் வரும் என்று அக்கட்சியினர் அச்சப்பட்டனர்.
வாய்ப்பூட்டு
இதையடுத்து வைகோவுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டது. இதை தமிழ் மாநில காங்கிரஸ் தங்கள் கூட்டணியில் இணைந்தபோது, வைகோவே சுட்டிக்காட்டி பேசினார். தனக்கு அப்படி ஏதும் வாய்ப்பூட்டு போடவில்லை என்று அவரே கூறினார்.
அளவோடு விமர்சனம்
ஆனால், வைகோவின் பரபரப்பு இப்போது அடங்கியுள்ளது. செல்லும் இடங்களில் எல்லாம் திமுக, அதிமுகவை விமர்சனம் செய்வதோடு வைகோ நிறுத்திக்கொண்டுள்ளார்.
பிரசாரம்
வைகோ மதிமுக வேட்பாளர்களையும், தேமுதிக-தமாகா-மக்கள் நல கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் முதல் கட்ட பிரசாரத்தை கடந்த 16ம் தேதி தொடங்கி நிறைவு செய்துள்ளார்.
இன்று வேட்புமனு
2ம் கட்டமாக நேற்று முதல் 30ம் தேதி வரை பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். கோவில்பட்டி, விளாத்திக்குளம், அருப்புக்கோட்டை உள்ளிட்ட தொகுதிகளில் வைகோ நேற்று பிரசாரம் செய்தார். நாளை காலையில் கோவில்பட்டியில் வைகோ வேட்புமனு தாக்கல் செய்கிறார். இருப்பினும் இதுவரை விமர்சனத்தை எதிர்கொள்ளும் வகையில் அவர் பேசவில்லை என்பது மக்கள் நல கூட்டணிக்கு ஆறுதல்.