பண பலத்தையும் மீறி பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும்: வைகோ
புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடந்த கட்சி நிர்வாகியின் இல்லத்திருமணவிழாவில் பங்கேற்க வந்த அவர் மேலும் கூறியதாவது:
தமிழகத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் திமுக அதிமுக ஆகிய கட்சிகளை புறக்கணித்து வாக்காளர்கள் நரேந்திரமோடியை இந்தியாவின் பிரதமராக்கப்போவது உறுதியாகிவிட்டது. தமிழகத்தின் வாழ்வாதாரங்களை வஞ்சித்ததுடன், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர் தாக்குதல் நடத்துவதற்கு உறுதுணையாக நிற்கும் மத்திய காங்கிரஸ் அரசு, தற்போது போர்க் கப்பலையும் இலங்கைக்கு தாரைவார்க்கத் துடிக்கிறது.
தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் துரோகம் செய்துள்ள காங்கிரஸ் கட்சியை அரசு அதிகார பீடத்திலிருந்து தூக்கி எறிய வேண்டும். இதே போல இலங்கையில் உள்ள தமிழர்கள் படுகொலைக்கும் காரணம் காங்கிரஸ் அரசு தான்.
இலங்கை போரின் போது விடுதலைப்புலிகளுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் கொடுஞ்செயல் செய்த காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து தமிழக வாக்காளர்கள் வரும் தேர்தலில் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை கேரளாவில் பேசிய பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சமூகநீதியைக்கட்டிக்காக்க அண்ணல் அம்பேத்காரின் கொள்கைகள் அவசியமானது, அதை தான் பின்பற்றி வருவதாகவும் கூறியுள்ளார். இது தமிழக மக்கள் மிகவும் கவனிக்க வேண்டிய முக்கியான செய்தியாகும்.
மக்களவைத் தேர்தலில் பணம் வௌ்ளமெனப் பாய்ந்தாலும் திமுக, அதிமுக என்று மாறி மாறி வெற்றி பெற்ற வரலாறு மாற்றப்படும். புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுவதன் மூலம் நாட்டில் மகத்தான மாற்றம் உருவாகும் என்றார் வைகோ.
இதில், மாவட்டச்செயலர் க.சந்திரசேகரன்,நிர்வாகிகள் வி.என்.மணி, மாத்தூர் கலியமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.