வளர்மதி நக்சலைட் என்பது அப்பட்டமான பொய்: தந்தை மாதையன்
விவசாயிகளுக்காகப் போராடி, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சேலம் கல்லூரி மாணவி வளர்மதி நக்சலைட் கிடையாது என்று அவரின் தந்தை மாதையன் தெரிவித்துள்ளார்.
சேலம்: எனது மகள் நக்சலைட் இல்லை. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கக் கூடாது என்று போராடிய எனது மகளை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என்று வளர்மதியின் தந்தை மாதையன்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், " என்னுடைய மகள் அரசுக்கு எதிராக போராடவில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கக்கூடாது என்றுதான் போராடினார். இதற்காக, மாணவி என்றும் பாராமல் குண்டர் சட்டத்தில் அவரை கைது செய்தது மன உளைச் சலை ஏற்படுத்தி உள்ளது.

என்னுடைய மகள் படிப்பில் படுசுட்டி. பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்று வந்தவர். பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்று, அப்போதைய வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திடம் பரிசு பெற்றார்.
பின்னர் காவல்துறை குறித்து சென்னையில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் பங்கேற்று பரிசு வென்றார். அவருக்கு அப்போதைய சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சுனில்குமார் சிங், பரிசு வழங்கி பாராட்டினார்.
ஆனால், போலீஸார் கூறுவது போல, நக்சலைட் போன்றவர்களுடன் என் மகளுக்கு தொடர்பு கிடையாது. இதே ஊரைச் சேர்ந்த நக்சலைட் இயக்கத்தில் இருந்த பழனிவேலு எங்களுக்கு தூரத்து உறவுமுறை.
இதனால், நக்சலைட்டுகளுடன் தொடர்பு என்று போலீஸார் அப்பட்டமாக பொய் கூறுகின்றனர். அரசுக்கு எதிராக வளர்மதி போராடவில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கக் கூடாது என்றுதான் போராடுகிறார்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications