இப்போதே தாலியை கட்டுங்க.. காதலர்களிடம் இந்து முன்னணியினர் கெடுபிடி.. போர்க்களமான வேலூர் கோட்டை
Recommended Video
வேலூர்: தாலியை இப்போதே கட்டுகிறீர்களா இல்லையா என காதலர்களை நெருக்கடிக்குள்ளாக்கிய, இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
காதலர் தினமான இன்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காதலர்கள் தங்களின் காதல் ஜோடிகளை சந்தித்து பேசி வருகிறார்கள்.
ஒவ்வொரு ஊரிலும் காதலர்கள் சந்திக்க சில இடங்கள் இருக்கும். சென்னைக்கு மெரீனா பீச் போல, வேலூருக்கு கோட்டை என்பது காதலர்களின் 'புண்ணிய' பூமியாகும்.
தாலி கட்ட வற்புறுத்தல்
புண்பட்ட மனதை இங்குதான் காதலர்கள் புகை போட்டு பழுக்க வைப்பார்கள் என்று ஊர்க்காரர்கள் பெருமையாக சொல்லிக்கொள்ளும் இடம் கோட்டை. இன்று காதலர் தினம் என்பதால் நூற்றுக்கணக்கான ஜோடிகள் இங்கு வருகை தந்திருந்தன. இந்த நிலையில், காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தாலிக் கயிறு மற்றும் மலர் மாலைகளுடன் ஒன்று கூடிய இந்து முன்னணியினர், அந்த காதலர்களிடம் கொடுத்து, இப்போதே தாலிகட்டுங்கள் என வற்புறுத்தினர்.
நழுவிய காதலர்கள்
இதனால் பீதியடைந்த காதலர்கள் அங்கிருந்து நழுவினர். இதை எதிர்பார்த்திருந்த காவல்துறையினர் அங்கே விரைந்தனர். அப்போது காவல்துறையினர் மற்றும் இந்து முன்னணியினர் இடையே வாக்குவாதம், தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்து முன்னணி கோட்டத்தலைவர் மகேஷ் தலைமையில் ஒருங்கிணைந்த இந்து முன்னணியினர் காவல்துறையினருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இந்து முன்னணியினர் கைது
காவல்துறையினர் இந்து முன்னணியினரை கலைந்து செல்லும்படியும் இல்லையென்றால் கைது செய்துவிடுவோம் என்று எச்சரித்தனர். அதையும் மீறி, காதலர்களுக்கு தொல்லை கொடுத்த, இந்து முன்னணியினரை, வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர் போலீசார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகாத வார்த்தைகளால் பேசியதாக புகார்
இதுகுறித்து இந்து முன்னணியினர் நிருபர்களிடம் கூறுகையில், "பல்லை உடைப்போம், இங்கு என்ன வித்தையா காட்டுகிறீர்கள்" என்று காவல் ஆய்வாளர் எங்களை மிரட்டினார். "செருப்பால் அடிப்பேன்" என்று போலீசார் ஆவேசமாக கூறி வலுக்கட்டாயமாக எங்களை கைது செய்தனர் என்று தெரிவித்தனர்.