தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி யாருக்கு?: ப.சி - ஜி.கே.வாசன் இடையே கடும் போட்டி!
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்ற ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழக காங்கிரஸ் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் ஆதரவாளரான பி.எஸ்.ஞானதேசிகன் உள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ், 38 இடங்களில் டெபாசிட்டை இழந்தது.

ஞானதேசிகன் பதவி விலக
தேர்தல் தோல்விக்கு ஞானதேசிகனே காரணம் என்று கூறி, அவர் பதவி விலக வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது ஆதரவு நிர்வாகிகள் அறிக்கை வெளியிட்டனர்.

ப.சிதம்பரம் மீது தாக்கு
அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வாசனின் ஆதரவாளர்களும் அறிக்கை வெளியிட்டனர். அதில், நாடு முழுவதும் காங்கிரஸ் தோல் விக்கு நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் தவறான பொருளாதாரக் கொள்கைகளே காரணம் என்று கூறியிருந்தனர். இந்த அறிக்கைப் போரால் தமிழக காங்கிரஸில் பரபரப்பு ஏற்பட்டது.

ஞானதேசிகன் அறிக்கை
மேலும், "தலைவர் பதவியில் இருந்து நான் விலகுவதற்காக அறிக்கை வெளியிடாதீர்கள். உங்கள் கருத்துக்களை கட்சி தலைமையிடம் தெரிவியுங்கள்" என ஞானதேசிகனும் கூறினார்.

உ.பி.யில் கலைப்பு
இந்நிலையில், சமீபத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள உத்தரபிரதேச காங்கிரஸ் கட்சியின் அனைத்து அமைப்புகளும் கலைக்கப்பட்டது.

தமிழகத்தில் புதிய தலைமை
அதேபோல், தமிழக காங்கிரஸ் கட்சியின் அமைப்புகளும் கலைக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

டெல்லியில் முகாம்
இதையடுத்து, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்றுவதற்காக ஜி.கே.வாசன், ப.சிதம்பரம் இடையே கடும் போட்டி நிலவுவதாகவும், இதற்காக அவர்கள் இருவரும் டெல்லியில் முகாமிட்டு, கட்சி தலைவர்களை சந்தித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாசனுக்கு முன்னுரிமை
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஞானதேசிகன் நீக்கப்பட்டால், ஜி.கே.வாசனுக்கே அந்த பதவி கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகி உள்ளது.

வெளியேற வாய்ப்பு
ஏனெனில் தமிழக காங்கிரஸில் ஜி.கே. வாசன் ஆதரவாளர்களே அதிக அளவில் உள்ளனர். ஒருவேளை தலைவர் பதவி கிடைக்காதபட்சத்தில் அவர் தனது ஆதரவாளர்களுடன் கட்சியிலிருந்து வெளியேறினால், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலை இன்னும் மோசமாகிவிடும் என்ற அச்சத்திலேயே அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

ஆறுபேரில் ஒருவர்
முன்னதாக தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ஜி.கே. வாசன், சுதர்சன நாச்சியப்பன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கார்வேந்தன், திருநாவுக்கரசர், செல்லக்குமார் உள்ளிட்ட 6 பேர்களது பெயர் பரிசீலிக்கப்பட்டதாக சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

கார்த்தி சிதம்பரமும்
இதற்கிடையே, தமிழக காங்கிரஸ் தலைவராக கார்த்தி சிதம்பரத்தை கொண்டுவர, சிதம்பரம் அணியினர் முயற்சிப் பதாகவும், இதுபற்றி ராகுல் காந்தியிடம் பேசி, இளந்தலைவர் ஒருவரை தமிழகத்தில் நியமித்து கட்சியை வலுப்படுத்தலாம் என்று வலியுறுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாயின.

ஊழல் வழக்கு பதிவு
இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் அரசியல் வளர்ச் சிக்குத் தடையாக, அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கார்த்தி சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர் வயலார் ரவியின் மகன் ரவி கிருஷ்ணா, ராஜேஷ் பைலட்டின் மகன் சச்சின் பைலட் மற்றும் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் மீது ராஜஸ்தான் மாநில சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆம்புலன்ஸ் ஊழல்
ரவி கிருஷ்ணாவுக்கு சொந்தமான சிகித்சா ஹெல்த் கேர் என்ற நிறுவனம், ராஜஸ் தான் மாநிலத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்கியதில் ரூ.14 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக அந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது. சிகித்சா நிறுவனத்தில் கார்த்தி சிதம்பரமும் ஒரு இயக்குநர் என்பதால் அவர் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புகார் அனுப்பும் எதிர்கோஷ்டி
இதையறிந்த ப.சிதம்பரத்தின் எதிர்கோஷ்டியினர், கார்த்தி மீதான வழக்கு குறித்து மேலிடத்துக்கு புகார் அனுப்பத் தயாராகி வருகின்றனர். ஒரு சிலர் இந்த வழக்கு குறித்த தகவல்களை மேலிடத்துக்கு அனுப்பியுள்ளனர். இது கார்த்தி சிதம்பரத்தின் அரசியல் வளர்ச்சிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என அவர்கள் கூறுகின்றனர்.

ஞானதேசிகன் விளக்கம்
இதற்கிடையே, தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனுக்கு கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து அவர் டெல்லி சென்றுள்ளார். அங்கு காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக்கைச் சந்தித்து தமிழக நிலவரம் மற்றும் தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அவர் விளக்கமளிப்பார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications