”சென்ன முத்து” என்று கூப்பிட்டால் திரும்பி பார்க்கும் 200 பேர் – இது வத்தலகுண்டு கலகலப்பு
வத்தலக்குண்டு: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் உள்ள ஒரு கிராமத்தில் கிட்டதட்ட 200 பேருக்கு ஒரே பெயர் அமைந்துள்ளதால் குழப்பமும், கலகலப்புமாக இருக்கின்றது அக்கிராமம்.
வத்தலகுண்டு அருகில் அமைந்துள்ளது காமாட்சிபுரம் கிராமம். இக்கிராமத்தில் ஒரே பெயரைக் கொண்ட 200 மனிதர்கள் வசித்து வருகின்றனர்.
இக்குழப்பத்தை தவிர்க்க அனைவருக்கும் அடைமொழி கொடுத்து அழைத்து வருகின்றனர் இப்பகுதி மக்கள்.
சென்றாயப் பெருமாள் கோவில்:
வத்தலகுண்டு பகுதியில் புகழ் பெற்ற "சென்றாயப் பெருமாள்" கோவில் அமைந்துள்ளது. மலைக் கோவிலான இப்பெருமாளின் பெயரைக் கொண்டு பழைய வத்தலகுண்டு பகுதியில் ஒன்றும், காமட்சிபுரத்தில் ஒரு கோவிலும் அமைந்துள்ளது.
சென்னமுத்து என்னும் பெயர்:
சென்றாயப் பெருமாளின் பெயரை, இப்பகுதி கிராமங்களில் சென்னமுத்து என ஆண் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவது வழக்கம். காமாட்சிபுரம் கிராமத்தில் 200 குடும்பங்களை சேர்ந்த 800க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
200 பேருக்கும் ஒரே பெயர்:
இதில் ஆண்கள் 400க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்த 400 பேரில் 200 பேருக்கு சுவாமி பெயரான "சென்னமுத்து" என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
திரும்பி பார்க்கும் முத்துகள்:
விழா காலங்களிலோ அல்லது ஒரே இடத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக கூடும் சமயங்களில், யாரேனும் ஒருவர் "சென்னமுத்து" என்று கூப்பிட்டால், அந்த இடத்தில் உள்ள அனைத்து ஆண்களும் திரும்பி பார்க்கின்றனர்.
சின்ன சென்னமுத்து, பெரிய சென்னமுத்து:
இதனால் பெரும் குழப்பம் ஏற்படுகிறது. சிலர் வித்தியாசப்படுத்துவதற்காக வயதை கணக்கிட்டு, பெரிய சென்னமுத்து, சின்ன சென்னமுத்து என அழைக்கின்றனர்.
மீண்டும் குழப்பம்:
ஆனாலும் சில குடும்பங்களில் அதே பெரிய சென்னமுத்து, சின்ன சென்னமுத்து, நடு சின்னமுத்து என அண்ணன், தம்பிகளுக்கு பெயர் உள்ளதால் அப்போதும் குழப்பம் நிலவுகிறது.
அடைமொழி மனிதர்கள்:
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், "தொழில், தந்தை பெயர், பள்ளி, கல்லூரிகளின் பெயர் என ஏதாவது ஒன்றை சென்னமுத்து என்ற பெயருக்கு முன், அடைமொழியாக சேர்த்துக் கொள்கிறோம்.
தினம்தினம் தீபாவளி:
பால்கார சென்னமுத்து, பெட்டிக்கடை சென்னமுத்து, கோழிக்கடை சென்னமுத்து, கறிக்கடை சென்னமுத்து என்று வித்தியாசப்படுத்தி வருகிறோம். இதனால், ஓரளவு குழப்பத்தை சமாளிக்க முடிகிறது" என்றனர். இதனால் அக்கிராமத்தில் தினம்தினம் கலகலப்பும், மகிழ்ச்சியுமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சவட முத்துகள் கிராமம்:
இதே திண்டுக்கல் மாவட்டத்தின் வேடசந்தூர் , ஒட்டன்சத்திரம் பகுதி கிராமங்களில் ஒரு ஊருக்கு 40, 50 சவடமுத்துகள் வலம் வருகிறார்கள். "சவடம்மாள்" என்ற குலதெய்வத்தை வழிபடுகிறவர்கள் தங்களது வீட்டில் மூத்த ஆணுக்கு சவடமுத்து என்றும் பெண்ணுக்கு சவடம்மாள் என்றும் பெயர் சூட்டுவது வழக்கம்.
ஊருக்குள் ஏகப்பட்ட சவட முத்துக்கள்:
அதனால் ஊருக்குள் ஏகப்பட்ட 'சவடமுத்துகள்' உலா வருகின்றனர். இவர்களையும் கோழிப்பண்ணை சவடமுத்து, வாத்தியார் சவடமுத்து, பி.சவடமுத்து, எஸ். சவடமுத்து, பெரிய சவடமுத்து, சின்ன சவடமுத்து என்று வேறுபடுத்தியே அழைக்கின்றனர்.
வெண்ணிலா கபடி குழு சவடமுத்து
வெண்ணிலா கபடி குழுவில் வரும் உடற்கல்வி ஆசிரியரின் பெயர் சவடமுத்து. அப்படியான ஒரு நல்லாசிரியர் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அம்பிளிக்கையில் வாழ்ந்து வருகிறார்.
"பேஸ்புக்"கிலும் சவடமுத்துகள்
பேஸ்புக்கில் 'savadamuthu' என்று தட்டிப் பாருங்கள்.. இப்படி ஒரு பட்டியல் வரும்.. இவர்கள் அனைவருமே வேடசந்தூர் சுற்றுவட்டார கிராமங்களை சொந்த ஊராக கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.