3 பல்கலைகளுக்கான துணைவேந்தர் நேர்காணல்.. பாஜகவின் பட்டியலில் இருந்து தேர்வு? கல்வியாளர்கள் அதிர்ச்சி
தமிழகத்தில் உள்ள 3 பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் நேர்காணல் இன்று நடைபெற்று வருகிறது. பாஜகவினர் கொடுத்த பெயர் பட்டியலில் இருந்து தேர்வு நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை: தமிழகத்தின் முக்கிய பல்கலைக்கழகங்களான அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், காமராஜர் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர் நியமிப்பதற்கான நேர்காணல் நடைபெற்று வருகிறது.
இந்த மூன்று பல்கலைக்கழங்களிலும் கடந்த ஓராண்டாக துணைவேந்தர்கள் இல்லாமல் காலியாகவே இருந்தன. இதனால் மாணவர்கள் பட்டமளிப்பு விழா நடத்த முடியாத சூழல் உருவானது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து லட்சக்கணக்கான மாணவர்கள் ஆண்டு தோறும் படித்து விட்டு வெளியே செல்வார்கள். அவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தபடாமலேயே இருந்ததால் பெரும் சிக்கல் ஏற்பட்டது.
முடங்கிய ஆய்வுப் பணிகள்
இதே போன்று சென்னை பல்கலைக்கழகத்திலும் துணைவேந்தர் இல்லாமல் ஆய்வுபணிகள் நடைபெறாமல் இருந்தன. இது தொடர்பாக பல்வேறு புகார்களை பேராசிரியர்களும், ஆசிரியர் சங்கத்தினரும் தெரிவித்து வந்தனர். துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழா நடத்தக் கூடாது என்று வழக்கும் தொடரப்பட்டிருந்தது.
மாணவர்கள் வெளிநாட செல்ல சிக்கல்
துணைவேந்தர்கள் நியமிக்கப்படாததால் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட சான்றிதழ்களில் துணைவேந்தர் கையொப்பம் இல்லாமல் இருந்தது. சான்றிதழ் செல்லுமா செல்லாத என்ற சந்தேகம் மாணவர்களுக்கு எழுந்தது. இதனால் வெளிநாடுகளுக்கு சென்று படிக்க முடியாத சூழல் மாணவர்களுக்கு உருவானது.
ஆளுநரிடம் பெயர் பட்டியல்
இந்த நிலையில், நேற்று தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற பின்னர், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆளுநர் மாளிகை சென்று பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். அப்போது துணைவேந்தர்களாக பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களின் பட்டியல் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ரகசிய பெயர் பட்டியல்
இதனைத் தொடர்ந்து இன்று துணைவேந்தர்களுக்கான நேர்காணல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நேர்காணலும் பல்வேறு விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. பெயர் பட்டியலை ஏன் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்ற கேள்வி கல்வியாளர் மத்தியில் எழுப்பப்பட்டுள்ளது.
பாஜக திட்டப்படி எடப்பாடி
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 500க்கும் மேற்பட்ட உறுப்புக் கல்லூரிகள் இருப்பதால் இதற்கு பாஜக ஆதரவு பெற்ற ஒருவர் துணைவேந்தராக வர வேண்டும் என்று பாஜக கருதுகிறது. அப்படி வந்துவிட்டால் பாடத் திட்டங்களை ஆர்.எஸ்.எஸ். மயமாக மாற்ற ஏதுவாக இருக்கும் என்பது பாஜகவின் திட்டம். அதன்படிதான் பழனிச்சாமியின் அரசு செயல்படுவதாக கல்வியாளர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.