ஜெ., போயஸ் வீட்டில் ஒரு பக்கம் ஐடி அதிகாரிகள் ஆய்வு - மறுபக்கம் மாவட்ட கலெக்டர் ஆய்வு
ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. அதே நேரத்தில் வருமானவரி சோதனையையும் இன்று நடைபெற்றுள்ளது.
சென்னை: போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் தலைமையில் 2வது முறையாக ஆய்வு நடைபெற்றது. பூட்டப்பட்ட அறைகள் திறக்கப்பட்டு வருமான வரித்துறை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
அரசின் இந்த அறிவிப்புக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் தீபக் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தங்களின் பூர்வீக சொத்து என்பதால் இதனை நினைவில்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.

நினைவில்லமாக்க எதிர்ப்பு
இது தொடர்பாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணையில் இருக்கிறது. இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின் படி ஜெ. தீபா அரசு தலைமைச் செயலரை சந்தித்து போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கான தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்தார்.

அளவிடும் பணிகள்
கடந்த மாதம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில் டிசம்பர் 30ஆம் தேதியன்று சென்னை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வேதா இல்லத்திற்கு வந்து அளவிடும் பணிகளை தொடங்கினர். வேதா இல்லத்தை அரசுடைமையாக்கும் நடவடிக்கையில் அடுத்தகட்டமாக வீட்டை அளவிடும் பணிகள் தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

உரிமை கோரினால் முடிவு
ஜெயலலிதாவிற்கு நேரடி வாரிசு என்று யாரும் கிடையாது யரேனும் உரிமை கோரினால் அப்போது முடிவெடுக்கப்படும் என்றும் நிலம் கையப்படுத்தும் பணி அளவிடும் பணிகள் 4 மாதத்தில் நிறைவடையும் என்றும் டிசம்பர் மாதம் கூறியிருந்தார் அன்புசெழியன்.

வேதா நிலையத்தில் ஆய்வு
இந்த நிலையில் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் அன்பு செழியன் தலைமையில் அதிகாரிகள் இன்றும் ஆய்வு மேற்கொண்டனர். வீட்டை நினைவு இல்லமாக்க அடுத்த கட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளதாக ஆய்வுக்குப் பின்னர் பேசிய அன்புசெழியன் ஐஏஎஸ் கூறினார். ஜெயலலிதா வாழ்ந்த வீடு விரைவில் கையகப்படுத்தப்படும் என்றும் கூறினார்.

பூட்டப்பட்ட அறைகள் திறப்பு
வருமான வரித்துறை அதிகாரிகளினால் பூட்டப்பட்டிருந்த இரண்டு அறைகள் திறக்கப்பட்டன. அந்த அறைகள் நில அளவையர்களால் அளக்கப்பட்டது. வருமான வரித்துறை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர் என்றும் அன்பு செழியன் தெரிவித்தார். ஆவணங்கள் கைப்பற்றப்பட்டனவா என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார். ஆய்வு பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும் அவர் கூறினார். ஜெயலலிதா இருந்த வரை ஈ, எறும்பு கூட உள்ளே நுழைய யோசித்த நிலையில் இப்போது ஆய்வு என்ற பெயரில் தினசரி பலரும் உருட்டி எடுக்கிறார்கள்.

விவேக் ஜெயராமன் வசம்
வேதா இல்லம் சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் மற்றும் அவரது சகோதரி கட்டுப்பாட்டில் இருக்கிறது. வேதா இல்லத்திற்கு யார் உரிமையுள்ளவர்கள் என்ற வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில் அதிகாரிகள் வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை தீவிரமாகியுள்ளது.












Click it and Unblock the Notifications