நாடாளுமன்றத்தில் இந்தி கட்டாயம்.. ஏற்காதவர்கள் அவையைவிட்டு வெளியேற வேண்டுமா… வேல்முருகன் கேள்வி
நாடாளுமன்றத்தில் இந்தி கட்டாயம் என்பது, அதனை ஏற்காதவர் நாடாளுமன்றத்தை விட்டே வெளியேறலாம் என்பதுவா என்று வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: நாடாளுமன்றத்தில் இந்தி கட்டாயம் என்று அறிவித்துள்ள மத்திய அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனையே கடித்து.... என்பார்களே, அந்த கதைதான் இது.
கல்வியிலும் அரசு அலுவல்களிலும் இந்தியைத் திணித்து வரும் நடுவண் பாஜக மோடி அரசு, இப்போது நாடாளுமன்றத்திலும் இந்தி கட்டாயம் என்கிறது.
இந்தி கட்டாயம்
அதன்படி, இந்தி மொழியைப் பேசவும் படிக்கவும் எழுதவும் தெரிந்த நடுவண் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோர் நாடாளுமன்ற நடவடிக்கைகளிலும் சரி, அவர்கள் கலந்துகொள்ளும் வெளி நிகழ்ச்சிகளிலும் சரி; இந்தியில்தான் பேச வேண்டும், எழுத வேண்டும், உரையாற்ற வேண்டும், அறிக்கை தர வேண்டும்.
ஜனாதிபதி ஒப்புதல்
இது தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு செய்த பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருக்கிறார்; அது விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
குழு பரிந்துரை
ஐமுகூ அரசில் உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் தலைமையில் 30 உறுப்பினர்களைக் கொண்ட "அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற ஆலோசனைக்குழு" அமைக்கப்பட்டது. அந்தக் குழு 2011ஆம் ஆண்டில் 117 பரிந்துரைகளை வழங்கியது. அவற்றில் ஒன்றுதான் இந்தப் பரிந்துரை.
வஞ்சக அரசியல்
இதனை ஐமுகூ அரசேகூட நிறைவேற்றாமல் கிடப்பில்தான் போட்டிருந்தது. ஆறு ஆண்டுகளுக்குப் பின் அதனைக் கையிலெடுத்து, "காங்கிரஸ் எடுத்த முடிவைத்தான் அமல்படுத்துகிறோம்" என்ற தனது வழக்கமான வஞ்சக பாணியில் இந்த இந்தித் திணிப்பைக் கொண்டுவந்திருக்கிறது மோடி அரசு.
பள்ளிகளில் திணிப்பு
இது மட்டுமல்ல; சிபிஎஸ்இ பள்ளிகள் மற்றும் கேந்திரிய வித்யாலயாக்களில் பத்தாம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாயப் பாடமாக்கவும் அனுமதியளித்திருக்கிறார் குடியரசுத் தலைவர்.
விமானப் பயணச்சீட்டு
ஏர் இந்தியா விமானங்களில் பயணச்சீட்டை இந்தியில் தரவும் இந்தி நாளிதழ்கள் வழங்கவும்கூட குடியரசுத் தலைவர் அனுமதித்திருக்கிறார்.
செத்துப் போன சமஸ்கிருதம்
மேலும் யாருமே பேசாத, வழக்கொழிந்து செத்துப்போன சமஸ்கிருதத்தை இந்தப் பகுத்தறிவு கால மக்களின் தலையில் கட்ட, பதிமூன்று பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்தது மோடி அரசு.
திட்ட வரைவு
அந்தக் குழு "சமஸ்கிருத வளர்ச்சிக்கான போக்கு மற்றும் திட்ட வரைவு - பத்தாண்டு கால முன்னோக்குத் திட்டம்" என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை நடுவண் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் தந்துள்ளது.
நிதி ஒதுக்கீடு
அதன்படி, அடிப்படைக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரையிலான அனைத்து நிலைகளிலும் சமஸ்கிருதத்தைப் பாடமாக்குவது; நடுவண் பல்கலைக்கழகங்கள், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்பக் கல்லூரிகள் ஆகியவற்றில் சமஸ்கிருதத்திற்கான தனிப் பிரிவுகள் தொடங்குவது; அவற்றுக்குத் தேவையான நிதி ஒதுக்குவது போன்றவை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கூட்டாட்சி தத்துவம்
இப்படி மக்களின் வரிப்பணத்தை குறிப்பிட்ட மொழிகளுக்கு மட்டும் கொட்டியழுவது எந்த வகை நியாயம்? இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் மொத்தம் 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. இதன் பொருள், இத்தனை தேசிய இனங்களைக் கொண்ட ஒரு கூட்டாட்சி நாடுதான் இந்தியா என்பதேயாகும்.
கேள்விக்குறி
அப்படியிருக்க, அனைத்து மொழிகளும்தானே ஆட்சிமொழியாக, அலுவல் மொழியாக இருக்க வேண்டும்? அதைச் செய்யாமல், இந்தியையும் சமஸ்கிருதத்தையும் மற்ற மொழியினர் மேல் திணித்து அவர்களின் வாழ்வுரிமையைக் கேள்விக்குள்ளாக்குவதா?
பாசிசப் போக்கு
அரசமைப்புச் சட்டமே அனுமதிக்காத இந்தப் பாசிசப் போக்கை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. பன்முகத்தன்மை எனும் வேற்றுமையில் ஒற்றுமையே மக்கள் பண்பாடு, பார்வை! அதை விடுத்து அனைத்தையும் அழித்து ஒற்றைத் தன்மையதாக்கும் கொலைநோக்குப் பார்வை கூடாது என்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
கைவிட..
எனவே இந்தித் திணிப்பையும் சமஸ்கிருதமயமாக்கத்தையும் அறவே கைவிடக் கோருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. நாடாளுமன்றத்தில் இந்தி கட்டாயம் என்று சொல்வது, அதனை ஏற்காத தேசிய இனம் அந்த நாடாளுமன்றத்தை விட்டே வெளியேறிவிடலாம் என்று சொல்வதற்கே ஒப்பாகும். அப்படிச் சொல்லவருகிறதா மோடி அரசு என்றும் கேள்வி எழுப்புகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்று வேல்முருகன் கூறியுள்ளார்.